மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்காத மதுரை தி.மு.க. நிர்வாகிகளுக்கு தலைமைக்கழகம் நோட்டீசு அனுப்பியுள்ளது.7 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 15-ந் தேதி மதுரையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தி.மு.க. தலைமைக்கழகத்தில் இருந்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் சிலருக்கு நேற்று நோட்டீசு ஒன்று வந்தது. அந்த நோட்டீசு தலைமைக் கழக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கையப்பமிட்டு வந்து உள்ளது. அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் கழகத்தின் அறிவிப்பின்படி இளைஞரணி நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் மதுரை மாநகரிலும் இந்த நிகழ்ச்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டு, கழகப்பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நேர்காணல் கடந்த 15-ந் தேதி மதுரை பி.டி.ஆர்.மகாலில் நடந்தது.
அதே தினத்தில் கழகத்தின் அறிவிப்பின்படி, மாலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக்கூட்டமும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி, நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்திருந்த சில இளைஞர்களை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கே விடாமல் தடுத்து இருக்கிறீர்கள்.
இது கழக கட்டுப்பாடுகளை மீறிய செயலாகும். ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியதாக தலைமைக்கழகம் கருதுகிறது. எனவே இந்த நோட்டீசு கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள் விளக்கத்தை தெரிவிக்க வேண்டும். தவறினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நோட்டீசு, மதுரை மாநகர் மாவட்ட திமுக அவைத்தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் மிசா பாண்டியன், கூடுதல் துணைச்செயலாளர் சிவக்குமார், தி.மு.க. பகுதி கழக செயலாளர்கள் பொன். சேது, ஒச்சுபாலு, கோபிநாதன், ரவீந்திரன், பாண்டியராஜன், முருகன், முபாரக்மந்திரி, ராமலிங்கம் ஆகியோருக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment