ஐ.பி.எல். போட்டியின் 11 வது லீக் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் துவங்கியது. இதில் ஆட்டத்தில் ஷேவாக் தலைமை யிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.
இந்த இரு அணிகளும் தான் ஆடிய 2 போட்டிகளில் 1 வெற்றியும், 1 தோல்வியும் பெற்றுள்ளன. இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணியில் ஜெயவர்த்தனே, பீட்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்டத்தில் ஆடிய அதே சென்னை வீரர்களே இந்த ஆட்டத்திலும் ஆடுகின்றனர்.
டெல்லியில் மழை பெய்ததன் காரணமாக இந்த ஆட்டம் 30 நிமிடம் தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற சேவாக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை அணி பேட்டிங்கை துவக்கியது.
இந்த அணியின் துவக்க வீரர்களாக டியூ பிளிசிஸ்ஸும், முரளி விஜயும் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்தை பிளிசிஸ் சந்தித்தார். அதில் ரன் அவர் எடுக்க முயன்று பின்வாங்கியதால் மறுமுனையில் நின்றிருந்த முரளி விஜய் பரிதாபமாக ரன் அவுட் ஆனார்.
அப்போது ஏற்பட்ட சரிவிலிருந்து சென்னை அணியால் கடைசி வரை மீள முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணியின் 4 வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் நமன் ஓஜா, சேவாக் ஆகியோர் முறையே 14 மற்றும் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த பீட்டர்சன், ஜெயவர்த்தனே ஆகியோர் அதிரடியாக ஆடி டெல்லி அணியை எளிதாக வெற்றி பெற வைத்தனர். டெல்லி அணி 13.2 ஓவர்களிலேயே 111 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. பீட்டர்சன் 43 ரன்களுடனும், ஜெயவர்த்தனே 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தனது 3வது லீக் ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி சந்தித்துள்ள 2வது தோல்வி இதுவாகும்.
No comments:
Post a Comment