கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி-ராயக்கோட்டை சாலையில் சஜ்ஜலப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அதே கிராமத்தில் வயலில் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் கொப்பக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவரிடம் இருந்து இரண்டு காளை மாடுகளை விலைக்கு வாங்கினார்.
கடந்த வாரம் கிருஷ்ண மூர்த்தி தனது காளை மாடுகளுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது சஜ்ஜலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன், சக்திவேல், முனியப்பன், சங்கர், சீமான் என்ற சக்திவேல் ஆகிய 5 பேர் வழி மறித்து இந்த வழியாக செல்ல வேண்டாம் என்று தகராறு செய்தனர்.
இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு வயலில் உள்ள வைக்கேல் போருக்கு சிலர் தீவைத்து விட்டனர்.
இதில் வைக்கோல் போர் எரிந்தது. அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையிலும் தீப்பிடித்தது. இதில் ஒரு மாடு திமிறிக் கொண்டு கயிறை அறுத்துக் கொண்டு பழைய எஜமான் மாதேஷ் என்பவர் வீட்டுக்கு சென்று கத்தியது.
நள்ளிரவு நேரத்தில் மாடு அலறுவதை பார்த்த அவர் எழுந்து வெளியே வந்தார். பின்னர் அந்த மாடு மீண்டும் கிருஷ்ணமூர்த்தியின் வயல் வீட்டுக்கு ஓடியது. அவரும் ஓடினார். அங்கு தீ எரிந்து கொண்டு இருந்தது. வீட்டில் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சூழ்ந்து உள்ள புகை மண்டலத்தால் சிலர் கத்துவது தெரிய வந்தது.
மாதேஷ் உடனடியாக தாழ்ப்பாளை திறந்தார். வீட்டுக்குள் படுத்து இருந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி வள்ளி, இரண்டு குழந்தைகள் மற்றும் வள்ளியின் தங்கை நந்தினி, தம்பி ராமமூர்த்தி ஆகியோர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.
பின்னர் நடந்தவற்றை மாதேஷ் கூறவும் 6 பேரும் காளை மாட்டால் உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். வாயில்லாத ஜீவன் 6 பேர் உயிரை காப்பாற்றிய விவரம் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் அந்த காளை மாட்டை அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.
தற்போது அந்த காளை மாடு வி.ஐ.பி அந்தஸ்தை பெற்று உள்ளது. தீ விபத்தில் அந்த 2 மாடுகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.
பின்னர் இந்த தீவைப்பு சம்பவம் குறித்து கிருஷ்ண மூர்த்தி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசில் முன் விரோதம் காரணமாக 5 பேர் தீவைத்து விட்டதாக சந்தேகப்படுவதாக கூறி உள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

manitha mirugam endru ini yaaraiyum thitti intha aintharivu jeevangalin jeevagaarunyathai kochai seithu vidaatheergal....
ReplyDelete