Friday, September 2, 2011

அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு திட்டம்?

அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிமுகவினருக்கு வந்துள்ள ரகசிய உத்தரவே இதற்குக் காரணம்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 2006ல் நடைபெற்றது. அப்போது தமிழகமெங்கும் திமுகவினர் கை ஓங்கி, சுயேட்சைகளையும், அதிமுகவினரையும் தேர்தல் வெற்றிக்கு பின் அவர்களை கவனித்து தி்முகவுக்கு கொண்டு வந்தனர். அப்போது திமுக ஆளும் கட்சியாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது ஆட்சி மாறி காட்சியும் மாறியுள்ளது. தற்போது அதிமுக ஆளுங்கட்சியாக உள்ளது. எனவே பெரும்பாலான இடங்களை வளைத்துப் போட அதிமுக தரப்பு ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனுவினை வரும் 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை அந்தந்த மாவட்ட கழக அலுவலகங்களில் செலுத்தவும், வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.2 ஆயிரமும், நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும் கட்ட சொல்லி அதிமுகவினருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளதாம்.

இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபரில் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்ப்பு எழுந்துள்ளது.
.
தற்போது அதிமுக ஆளும் கட்சி என்பதாலும், கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வளமாக இருப்பதையும் கண்டு அதிமுகவினர் வரித்து கட்டிக் கொண்டு உற்சாகத்தோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர்.

பலர் கட்சி போராட்டங்களில் கலந்து கொண்ட தகவல்கள், கட்சி போராட்டத்தில் சிறை சென்ற சான்றுகள் உளளிட்டவைகளையும் சேகரித்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் உற்சாகத்தில் உள்ள அதிமுகவினர் பொறுப்பாளர்களை இணைத்து நெல்லை மாவட்டத்தில் ரகசிய ஆய்வு கூட்டங்களும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




No comments:

Post a Comment