Sunday, September 25, 2011

தூத்துக்குடியில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை ; துரத்தி துரத்தி ஆள் பிடிக்கும் காங்கிரஸ்!


தூத்துக்குடி காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேட்பாளர் யாரும் கிடைக்காததால்  ஆத்திரத்தில் இருக்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.  

முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் ஆகியோர் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்றும் பேசி திமுகவை உசுப்பேத்தினார்கள்.

இதனால் கலைஞரும், திமுக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவிக்க,  காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், தனித்து போட்டி என்று அறிவிக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் காங்கிரஸ் சார்பில், 19 பேர்கள் மட்டுமே விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மற்ற வார்டுகளுக்கு ஓடி ஓடி ஆட்களை தேடும் நிலை இருந்ததால் ,  ஒரு வழியாக சுயேட்சைகளை சரிக்கட்டி, 53 வார்டுகளுக்கு போட்டியிட ஆட்களை சேர்த்தாகிவிட்டது. அப்படியும் இன்னும் 7 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை.


இதனிடையே தூத்துக்குடி மேயர் பதவி,  பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால் நகரின் காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள், காங்கிரஸ் தலைவர்கள் தோல்வி பயத்தில் தங்களது மனைவியைக்கூட வேட்பாளராக நிறுத்த முன் வரவில்லை.   மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளும் ஒதுங்கிவிட்டனர்.

சிலரை வேட்பாளராக நிற்கச்சொல்லி கேட்டுப்போனால் அலறி ஓடுகிறார்கள்.   விடாமல் அவர்களை துரத்துகிறார்கள்.  

இன்னும் இரண்டொரு நாட்களில் வேட்பு மனுதாக்கல் முடிவடையும் நிலையில்  இப்படி துரத்தி துரத்தி/ ஓடிப்பிடித்து ஆட்களை சேர்த்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸின் இந்த நிலைமைக்கான காரணத்தை காங்கிரஸ்காரர்களே அறிவார்கள்.   போட்டியிடுவதற்கு வேட்பாளர்களே இல்லாத நிலையில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிவருவது எப்படி சாத்தியமாகும்என்று கேள்வி எழுப்புகிறார்கள்   அப்பாவி காங்கிரஸ் தொண்டர்கள்.


No comments:

Post a Comment