யோகி தேவராஜ்... பத்திரிகையாளராக இருந்து கொண்டே சினிமாவிலும் ஜெயித்துக் காட்டியவர். நல்ல நடிகர் என்ற அங்கீகாரம் பெற்ற ஒரே பத்திரிகையாளர் அநேகமாக தேவராஜாகத்தான் இருக்கும்.
சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பிய நேரம். விமான நிலையத்துக்கு வெளியே நிருபர்களுடன் ஒருவராக தேவராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது காவலுக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் இவரையே பார்த்தபடியிருந்தனர்.
ஒருவர் திடீரென்று அருகில் வந்து, சார்.... அழகர்சாமியின் குதிரையில் சரண்யா மோகனுக்கு அப்பாவா நடிச்சது... நீங்கதானே!, என்று கேட்க, புன்னகையுடன் அவருக்கு கை கொடுத்தார். அடுத்த நொடி அருகிலிருந்தவரிடமிருந்து ஒரு துண்டுச் சீட்டு வாங்கி, தேவராஜிடம் ஆட்டோகிராப் பெற்ற அந்த காவலர், 'என் மகள் கேட்பாள்' என்றபோது, 'இதாங்க சினிமாவின் ரீச்' என்றார்.
யோகியில் இவரது நடிப்பைப் பார்த்த பிறகு, போகுமிடமெல்லாம் இவரை கொஞ்சம் மிரட்சியோடுதான் பார்க்கிறார்களாம்.
முத்துக்கு முத்தாக படத்தில் மருத்துவராக இவர் வருவது கொஞ்ச நேரமே என்றாலும் அனைவரும் ரசித்த காட்சியாக அது அமைந்துவிட்டது.
இப்போது அவர் நடித்து வரும் படங்களில் முக்கியமானது ஒரு நடிகையின் வாக்குமூலம். சோனியா அகர்வாலின் அப்பாவாக நடிக்கிறாராம் இவர்.
இந்தப் படம் மட்டுமல்ல, வரவிருக்கும் வேறு சில படங்களிலும் இவர் அப்பா வேடத்தில்தான் வருகிறாராம்.
தேரோடும் வீதியிலே படத்தில் பாயல் கோஷுக்கு அப்பாவாக வருகிறாராம். இதையெல்லாம் விட சுவாரஸ்யமாக தகவல், வன யுத்தம் படத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு அப்பாவாக நடித்துள்ளாராம்.

No comments:
Post a Comment