Friday, February 24, 2012

தகவல் உரிமை சட்டத்தில் வருமானம்-சொத்து விவரங்களை வெளியிட சோனியா மறுப்பு


சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.கோபால கிருஷ்ணன் டெல்லி வருமான வரி உதவி கமிஷனருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு அனுப்பி இருந்தார்.

அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 2000-2001 மற்றும் 2010-2011-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்த படிவங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 11-ன் கீழ் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது பற்றி வருமான வரி உதவிக் கமிஷனர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு சோனியா பதில் தெரிவித்துள்ளார்.   அதில், எனது சொத்து கணக்கு, வருமானவரி செலுத்திய விவரங்கள் தனிப்பட்ட விஷயம். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான் அதை தேவையில்லாத 3-வது நபருக்கு பரிமாறக் கொள்ளக் முடியாது. அது எனது தனிப்பட்ட பாதுகாப்பு விவகாரத்தில் தலையிடுவதாகும்.

தனி நபர் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் ரகசியமானவை. பாதுகாக்கப்பட வேண்டியவை. 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 138-வது பிரிவின் கீழ் யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று சோனியா பதில் அளித்துள்ளார்.

சோனியாவின் பதிலை மனுதாரருக்கு வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.   சோனியாவின் வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க மறுத்து இருப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே இது போல் வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை கேட்டிருந்தார். அதற்கு சோனியாவிடம் பதில் பெறாமல் வருமான வரித்துறையே தர மறுத்து விட்டது.

அதன் பிறகு கடந்த மாதம் கோபாலகிருஷ்ணன் மீண்டும் வருமான வரித் துறையிடம் சோனியாவின் வருமான வரி கணக்குகளை கேட்டு கடிதம் அனுப்பினார்.

இந்த முறை சோனியாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் பதில் பெற்று அதை மனுதாரருக்கு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 2-வது முறையாகவும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


No comments:

Post a Comment