Friday, February 3, 2012

செக்போஸ்ட்டில் வைத்து சிக்கிய சசிகலா தம்பி திவாகரன்- சிறையில் அடைப்பு


சசிகலாவன் தம்பியான திவாகரனை நீடாமங்கலம் போலீஸார், திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து கைது செய்துள்ளனர். அவர் உடனடியாக நீதிபதி முன்பு நிறுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர், திவாகரன் மீது வீடு இடிப்பு புகார் அளித்தார். இது தொடர்பாக ரிஷியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த சில நாட்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் திவாகரன் சமீபத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் அவரது முன்ஜாமீன் மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் நீடாமங்கலம் போலீஸார் திவாகரனை கைது செய்துள்ளனர். அவரை நீடாமாங்களலம் கோர்ட் மாஜிஸ்திரேட் செல்லப்பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் திருச்சி சிறையில் அடைத்தனர்.

நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் திருச்சி அருகே அரியமங்கலம் சோதனைச்சாவடியில், திருச்சி சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் திவாகரன் இருந்தாராம். உடனே அவரைக் கைது செய்தனராம்.

போலீஸார் தன்னை வலை வீசித் தேடிக் கொண்டிருந்தபோது போலீஸார் குவிக்கப்பட்டிருந்த செக்போஸ்ட் வழியாக திவாகரன் வந்ததுதான் பெரும் ஆச்சரியமாக உள்ளது.

சசி குடும்பத்தில் 2வது கைது

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 2வது நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ராவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம். அடுத்து யார் கைதாகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.


No comments:

Post a Comment