Sunday, March 25, 2012

ஐ.நா. தீர்மானம் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் : ராஜபக்சே தம்பி புலம்பல்


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இதையடுத்து இலங்கை அரசும், அதிபர் ராஜபக்சேவும் இந்தியா மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். கருத்துக்கள் தெரிவிக்கிறோம் என்ற பெயரில் ராஜபக்சேவும், அவரது அரசில் இடம் பெற்றுள்ள மந்திரிகளும் ஏதேதோ புலம்பி வருகின்றனர்.

ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போட்டதால் தீவிரவாதத்தின் பாதிப்புகளை இந்தியா அனுபவிக்க நேரிடும் என ராஜபக்சே சாபமிட்டார். தற்போது அவரது தம்பியும் பொருளாதார அபிவிருத்தி மந்திரியுமான பசில் ராஜபக்சேவும் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை தீர்மானத்தின் முடிவுகள் இந்தியாவின் பிராந்திய தலைமைத்துவத்திற்கு சவாலாக அமைந்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டுள்ளன. இந்தியா, அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்தது. எனினும் மாலத்தீவு மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவு அளித்தன. மனித உரிமை பேரவையில் உறுப்பினராக இல்லாத பாகிஸ்தானும் இலங்கைக்கு தனது ஆதரவை தெரிவித்து இருந்தது.

அதன்படி பிராந்தியத்தின் தலைமை பதவிக்கான தகுதியை இந்தியா இழந்து வருகிறது. ஆகவே இலங் கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் இந்தியாவுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.

 இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment