Thursday, May 24, 2012

பெட்ரோல் விலை குறைக்கப்படமாட்டாது: இந்தியன் ஆயில் நிறுவன தலைவர்


பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவாக லிட்டருக்கு ரூ. 7.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.வரலாறு காணாத இந்த விலை உயர்வு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காங்கிரஸின் கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போன்றவை இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உயர்த்தப்பட்ட பெட்ரோலின் விலையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
விலை உயர்வு குறைப்பது குறித்து நாளை மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதன் முடிவில் பெட்ரோலின் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் பெட்ரோலின் விலையை குறைக்க முடியாது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து  இந்நிறுவனத்தின் தலைவர் புட்லா கூறியதாவது:
 
சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்ததால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். பெட்ரோல் விலையை உயர்த்தாமல் இருந்த ஒவ்வொரு நாளும் 50 கோடி ரூபாய் இழப்பினை எண்ணை நிறுவனங்கள் சந்தித்து வந்தன.
 
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இன்று வரை, எண்ணை நிறுவனங்களுக்கு 4500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்டும்படி கேட்டதற்கு மத்திய அரசு மறுத்துவிட்டது. அதனாலேயே விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்தால், பெட்ரோலின் விலை குறைக்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.






















No comments:

Post a Comment