Friday, June 22, 2012

ஜனாதிபதி தேர்தலில் தகுதியான வேட்பாளரை கருணாநிதி அடையாளம் காட்டி வருகிறார்: கே.என்.நேரு

தா.பேட்டை அடுத்த பைத்தம்பாறை கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி 89-வது பிறந்த தினவிழா பொதுக்கூட்டம் ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பாக நடைபெற்றது. 

கூட்டத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.சேகரன் தலைமை தாங்கினார். தா.பேட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் எம்.மயில்வாகணன், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணைத்தலைவர் சகுந்தலாமுருகேசன், மாநில கைத்தறி ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் அரவன், ஒன்றிய கவுன்சிலர் தண்டபாணி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் கோவிந்தசாமி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். 

கிளை செயலாளர் ராஜரத்தினம் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேரு, கழக வெளியீட்டு செயலாளர் என்.செல்வேந்திரன், தலைமை கழக பேச்சாளர் தமிழ்மன்னன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். 

அப்போது முன்னாள் அமைச்சர் நேரு பேசியதாவது:- 

அ.தி.மு.க. அரசு என்மீது 9 கொலை முயற்சி வழக்குகள் போட்டுள்ளது. 12 ஆண்டுகள் அமைச்சராகவும், 30 ஆண்டுகளாக சேலம் மாவட்ட திமுக செயலாளராக இருந்து வரும் வீரபாண்டி ஆறுமுகம் மீது 5 பொய் வழக்குகள் போட்டு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடி என்று எதிர்கட்சிகள் கூறிய பொய்யான குற்றச்சாட்டிற்கு பொதுமக்களிடம் சரியான முறையில் நாம் விளக்கம் அளிக்காததுதான் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்று போனதுக்கு காரணம். 

திமுகவினர் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் திமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதிமுக தேர்தல் சமயத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 

ஜனாதிபதி ஆவதற்கு தகுதியானவரை ஜெயில்சிங் காலத்தில் இருந்தே தலைவர் கருணாநிதி அடையாளம் காட்டிவருகிறார். அந்தவகையில் தற்போது பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி ஆவதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 

கடந்த திமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்திற்கு 225 கோடியில் குடிநீர் திட்டம், 200 கோடி செலவில் சாலைகள் அகலப்படுத்தும் பணிகள், 77கோடியில் வெள்ள தடுப்பு பணிகள் போன்ற பல எண்ணற்ற சாதனைகளை செய்து கொடுத்துள்ளோம் என்று பேசினார். 

முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் சுருளி, கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொறுப்பு குழு முன்னாள் உறுப்பினர் கோட்டூர் முருகேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் காருகுடி கிருஷ்ணமூர்த்தி, சேருகுடி த.அசோக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் வீரமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் ஜெயபிரகாஷ், ராஜா, நடேசன், பொன்னரசன், மருதை, மாவட்ட மகளிரணி திலகவதி, 

ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜ், பாக்கியம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுதாகர், நகர இளைஞரணி அமைப்பாளர் சிவக்குமார், பேரூராட்சி உறுப்பினர்கள் கருணாநிதி, சசிகலாசரவணன், முன்னாள் நகர துணைச் செயலாளர் தக்காளி தங்கராசு, வார்டு உறுப்பினர் செந்தில்குமார், இளைஞரணி சரவணன், பால்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இறுதியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விஜய் நன்றி கூறினார்.




No comments:

Post a Comment