Tuesday, July 31, 2012

மதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்ற டாக்டர் கைது


மதுரையை அடுத்த கரிசல்பட்டியை சேர்ந்தவர் மேரி (வயது 16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ்-2 மாணவியான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் மேரியை மதுரை, சொக்கலிங்கம் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு கடந்த 2 நாட்களாக மேரிக்கு ஊசி மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
 
இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சைக்கு வந்த மேரிக்கு அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் சங்கரநாராயணன் ஊசி போட்டார். இதனால் மயக்கம் ஏற்படும் என்பதால் அங்குள்ள ஒரு அறையில் சிறிது நேரம் தங்கிவிட்டு செல்லும்படி டாக்டர் கூறினாராம். அதன்படி மேரியை ஒரு அறை கட்டிலில் ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு அவரது சகோதரியும், மாமாவும் பழங்கள் வாங்க வெளியே சென்றனர்.  
 
அப்போது மேரி இருந்த அறைக்கு வந்த டாக்டர் சங்கரநாராயணன் அவரை கற்பழிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கூச்சல் போட்ட மேரி அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். கடைக்கு சென்ற அவரது சகோதரியும், மாமாவும் திரும்பி வந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து அறிந்த அவர்களும் ஆத்திரம் அடைந்து சத்தம் போட்டனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் ஆஸ்பத்திரி முன் கூடினர். அவர்கள் தன்னை தாக்குவார்கள் என்று பயந்த டாக்டர் சங்கர நாராயணன் ஒரு அறைக்குள் சென்று கதவினை பூட்டிக் கொண்டார்.  
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, உதவி கமிஷனர் கணேசன் மற்றும் எஸ்.எஸ்.காலனி போலீசார் உடனடியாக அங்கு வந்தனர். அறைக்குள் இருந்து வெளியே வரும்படி அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து கதவை உடைத்து திறந்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


No comments:

Post a Comment