Friday, September 14, 2012

டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு: சிமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் புதிய கட்டுப்பாடு


இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட வேண்டுமானால் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனே உயர்த்த வேண்டும் என்று எண்ணை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
 
இதற்கு பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து 11-ம் தேதி பிரதமர் தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விலை உயர்வு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் அக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
 
இந்நிலையில் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது பற்றி பிரதமர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.
 
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு ஆண்டுக்கு 6 சிலிண்டர் வரை வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் வாங்கினால் அரசு மானியம் வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் பெட்ரோலுக்கான கலால் வரியை மத்திய அரசு குறைத்து உள்ளது. இதனால் பெட்ரோல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பெட்ரோல் மற்றும் மண்எண்ணை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டீசல் விலை உயர்வினால் ரூ.19 ஆயிரம் கோடியும், சமையல் எரிவாயு கட்டுப்பாடு செய்வதன் மூலம் ரூ.2 ஆயிரம் கோடியும் அரசுக்கு சேமிப்பாகும்.
 
முன்னதாக டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு குறைந்தபட்சம் 100 ரூபாயும் உயர்த்தலாம் என நிதியமைச்சகம் பரிந்துரை செய்தது.


No comments:

Post a Comment