Saturday, September 22, 2012

ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலை: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை


எப்பொழுதும் தமிழர்களை இந்தியாவின் நீட்சியாகக் கருதி பகைமை காட்டும் சிங்கள அரசு விரிக்கும் வஞ்சக வலையில் இந்தியா விழுந்துவிடக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நம்பாத மத்திய அரசு

தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக்கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதையும், அவருக்கு இங்கே வரவேற்பு கொடுப்பதையும், மத்தியப் பிரதேசத்திற்கு அவர் சென்று அங்கே புத்தமதச் சம்மந்தமான மையத்தைத் திறந்து வைப்பதையும் எதிர்த்தும்கூட, இந்திய அரசோ, தமிழக அரசோ அதைப் பற்றி கவலைப்படாதது மாத்திரமல்ல; மத்திய அரசே ஒரு அமைச்சரை அனுப்பி வரவேற்பதும், அவருக்கு பிரதமரே விருந்தளிப்பதும் மரபுப்படி தவிர்க்க முடியாதது என்றாலும் எந்த அளவிற்கு தமிழர்களின் உணர்வுகளை காயப் படுத்துகிறது என்பதை ஈழத் தமிழர்கள்பால் அன்பு கொண்டுள்ள அனைவரும் அறிவர். இலங்கைக்கு சீனாவும், பாகிஸ்தானும் நேரடி யாகவும் மறைமுகமாகவும் உதவி வருகிறது என்று நாம் திரும்பத் திரும்பச் சொன்னாலும், இந்திய அரசு அதை நம்புகிறதா? நம்பிச் செயல்படுகிறதா? நம்பிடவே இல்லையா? என்பது தெரியவில்லை.

டெசோ தீர்மானங்கள்

சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் இந்த அளவிற்கு இலங்கைக்கு நட்பு இருப்பதால்தான், இலங்கைத் தமிழர்களைத் தாக்குவதிலும், கொடுமை புரிவதிலும், கொன்று குவிப்பதிலும் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. அந்த உண்மையை நம்முடைய இந்திய அரசும் புரிந்து கொள்ளாமல், இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி வருவதோடு, தற்போது இலங்கை அதிபரை வரவேற்பதிலும் அக்கறை காட்டுகிறது. கடந்த 12-8-2012 அன்று சென்னையில் நடைபெற்ற "டெசோ'' மாநாட்டில் தீர்மானத்தை நிறைவேற்றி, இந்தியப் பிரதமருக்கு அப்போதே அனுப்பியிருக்கிறோம். தமிழீழப் பகுதிகளிலிருந்து உடனடியாக ராணுவத்தைச் சிங்கள அரசு விலக்கிக் கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் அவையும் உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. ராணுவத்தைத் திரும்பப் பெறுவதை நேரடியாகக் கண்காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டுக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநாடு கேட்டுக் கொள்கிறது.'' டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "டெசோ'' மாநாட்டின் இந்தத் தீர்மானம் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களையும், விரைவில் ஐ.நா. மன்றத்தில் நேரடியாகவே கொடுக்க இருக்கிறோம்.

எதிரியாக கருதும் சிங்கள அரசு

ஒவ்வொரு அரசும் இலங்கையிலிருந்து தமிழினத்தை அறவே துடைத்தெறிவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றன. இலங்கையில் தமிழர்கள் இருப்பதை சிங்கள அரசு இந்தியாவின் நீட்சியாகவே கருதி பகை பாராட்டி வருகிறது. இந்திய நாடு எவ்வளவு உதவிகளைச் செய்தாலும், எவ்வளவு ஆழமான நேசத்தோடு கரம் கொடுத்தாலும், அதையேற்று போற்றுவதற்கு சிங்கள அரசு தயாராக இல்லை. மாறாக இந்தியாவோடு வேற்றுமை கொண்டுள்ள நாடுகளான பாகிஸ்தானோடும், சீனாவோடும் தான் நட்பை வளர்த்துக் கொள்ள இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது என்பதை நான் மேலே எழுதியுள்ள பல்வேறு குறிப்புகளும் தெளிவாக்கும் என்றே நம்புகிறேன்.

வஞ்சக வலை

இந்தக் குறிப்புகள் அனைத்தும் இந்திய அரசுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. எனவே இனியாவது விழித்துக் கொண்டு, சிங்கள அரசும், அதன் அதிபர் ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்துவிட வேண்டாமென்றும், மிச்சமிருக்கும் ஈழத் தமிழர்களையாவது காப்பாற்றி அவர்களுக்கு வாழ்வா தாரத்தையும், வாழ்வுரிமையையும், ஜனநாயக உரிமைகளையும் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் உலகத் தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment