Monday, October 1, 2012

சூப்பர்-8 ஆட்டம்: 5 வருடத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த முதல் 'சூப்பர்' வெற்றி!

டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் எட்டு சுற்றில் இந்தியாவுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி கிடைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

2007 முதல் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி நடந்து வருகிறது. தற்போது நடப்பது 4வது உலகக் கோப்பைப் போட்டியாகும். முதல் உலகக் கோப்பையை டோணி தலைமையிலான இளம் இந்திய அணி அசகாயமாக வென்று கலக்கியது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2009, 2010 ஆகிய தொடர்களில் இந்தியா பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. சூப்பர் எட்டு வரை மட்டுமே அந்த்த தொடர்களில் இந்தியா முன்னேறியது. ஆனால் சூப்பர் எட்டு சுற்றில் ஒரு போட்டியில் கூட அது வென்றதில்லை.

இந்தக் கேவலத்தை நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துடைத்து விட்டது இந்தியா. அப்படியும் கூட முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் நாசகரமான தோல்வியைச் சந்தித்தது இந்தியா. சரிதான், இந்த வாட்டியும் நம்மவர்கள் கேவலப்படப் போகிறார்கள் என்றுதான் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் நேற்று பாகிஸ்தானிடம் இந்திய வீரர்கள் காட்டிய புயல் வேகம் ரசிகர்களை நிமிர வைத்து விட்டது.

சரியாக 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா சூப்பர் எட்டு சுற்றில் ஒரு வெற்றியைப் பதிவு செய்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா


இந்திய அணியில் அதிரடி துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் சூப்பர்-8  ஆட்டத்தில், இந்திய அணியில் சேவாக் சேர்க்கப்படவில்லை. அப்போட்டியில் 5 பந்து வீச்சாளர்களுடன் ஆடுவதற்கு வசதியாக பார்மில் இல்லாத சேவாக் நீக்கப்பட்டார். கேப்டன் டோனியில் இம்முடிவால், இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.

இதனாலேயே இன்றைய ஆட்டத்தில் சேவாக் முக்கியம் என்பதை உணர்ந்து அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோல் அணியில் மற்றொரு மாற்றமாக, தமிழக வீரர் பாலாஜி சேர்க்கப்பட்டார். சேவாக், பாலாஜி இடம்பெற்றதால் கடந்த போட்டியில் ஆடிய சுழற்பந்துவீச்சாளர்கள் ஹர்பஜன், பியுஷ் சாவ்லா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஹபீஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக ஹபீசும், நசீரும்  களமிறங்கினர்.

கடந்த போட்டியில் பந்துவீச்சில் முழுவதுமாக சொதப்பிய இந்திய வீரர்கள் இப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் பாகிஸ்தானின் வலிமையான பேட்டிங் வரிசை ஆட்டம் காண ஆரம்பித்தது.   8 ரன்கள் எடுத்த நசீர் பதான் பந்திலும், தொடர்ந்து வந்த அதிரடி வீரர் அப்ரிடி  14 ரன்கள் எடுத்த நிலையில் பாலாஜி பந்திலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் யுவராஜ் சிங் தன்பங்குக்கு ஜாம்ஷெட் (4 ரன்), கம்ரான் அக்மல் (4)   ரன் ஆகியோரை அவுட்டாக்கினார். கேப்டன் ஹபீஸ் கோலி பந்தில் வீழ்ந்தார்.அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மாலிக்கும், உமர் அக்மலும் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாகிஸ்தான் அணியின் கைகளுக்கு செல்வது போன்ற தோற்றம் ஏற்பட்டது. எனினும் மாலிக் (28 ரன்), அக்மல் (21) ஆகியோர் அஷ்வின் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், பாகிஸ்தானின் அதிரடி கட்டுப்படுத்தப்பட்டது.

இறுதியில் பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 128 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் பாலாஜி 3, யுவராஜ், அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக காம்பீரும், ஷேவாக்கும் களமிறங்கினர். இரண்டாவது பந்திலே காம்பீர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதானல் ஷேவாக்குடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணியினை வெற்றி நோக்கி கொண்டு சென்றனர். ஷேவாக 29 ரன்கள்(24 பந்துகளில், 4 பவுண்டரி) எடுத்திருந்த போது உமர் குல்லிடம் கேட்ச் கொடுத்தார். அப்போது அணியின் ஸ்கோர் 75 ஆக இருந்தது.

அதனைத் தொடர்ந்து யுவராஜ் களமிறங்கினார்.  17 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோலி 78 ரன்களுடன்( 61 பந்துகளில், 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்) யுவராஜ் சிங் 19 ரன்களுடனும்( 16 பந்துகளில், 2 பவுண்டரி) களத்தில் இருந்தனர். ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்றுள்ள உலககோப்பை போட்டிகளில் (20 ஓவர் மற்றும் 50 ஓவர்) இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment