“மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் கதையை முதல் முறையாக படமாக்கிட்டு இருக்கோம். அந்தக் காலத்தில பயன்பட்ட வில்-அம்பு, ஈட்டி, கல், கத்திகளை உருவாக்கியிருக்கோம். போர்க் காட்சிகள் மிரட்டலா வந்துக்கிட்டிருக்கு. காதல், காமம், வீரத்தை மரபு மணம் மாறாமல் காட்டப் போறோம்“ என்று பெருமிதமாக பேசத் தொடங்குகிறார், அறிமுக இயக்குநர் ம.செந்தமிழன்.
கற்றது தமிழ் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த இவர் இயக்கி வரும் ‘பாலை‘யின் நாயகி காயாம்பூவாக நடிக்கிறார் ‘காஞ்சிவரம்‘ ஷம்மு. நாயகன் வலன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சுனில் இதற்கு முன்பு ’அன்புள்ள மான் விழியே’ என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். தஞ்சையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இலை தழைகளை உடுத்தியிருந்த ஷம்முவுக்கும், இடுப்புத் துண்டு மட்டும் கட்டியிருந்த சுனிலுக்கும் காதல் காட்சிகளை நடித்துக் காட்டிக் (!) கொண்டிருந்த இயக்குநர் கிடைத்த இடைவெளியில் நம்மிடம் பேசினார்.
“மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய கதை பார்வையாளர்களுக்குப் புது அனுபவதைக் கொடுக்கும் என நினைக்கிறோம். ஷம்முவைத் தவிர எல்லோருமே புதுமுகங்கள். தொல்குடி மக்களைப் பற்றியது என்பதால் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களை முக்கிய ரோல்ல நடிக்க வச்சிருக்கேன். வரலாற்றுப் படம் என்றாலே அரசர்களின் கதை என்ற வழக்கத்தை மாற்ற முயற்சிக்கிறோம். இரு இனக் குழுக்களுக்கு இடையிலான போர்தான் படத்தின் கரு. இந்தப் போர் ஏன்? இதில் யார் ஜெயிச்சாங்க? அப்படீங்கறதுதான் கதை.
பழந்தமிழர்கள் வாழ்ந்த ஒரு கிராமத்தையே தஞ்சாவூரில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தி வர்றோம். அந்தப் பகுதி மக்கள் தினமும் கூட்டம் கூட்டமா வந்து அந்த செட்டை ஆச்சர்யத்தோட பார்த்திட்டுப் போறாங்க. மர வீடு, ஆற்றின் நடுவே கட்டப்பட்ட இறைச்சி அறுக்கும் இடத்தை செட் என்று சொன்னால்தான் தெரியும். அந்தளவுக்கு தத்ரூபமாக செய்திருக்கிறோம்.
மைசூர், கொடைக்கானல், பழனி, சத்தியமங்கலம், ஈரோடு, தஞ்சாவூர் என இன்றைய நாகரீகங்கள் போய் சேராத வனப்பகுதிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். இந்த லோக்கேஷன்களை கண்டுபிடிக்க நாங்க அலைந்ததே பெரிய கதை“ என்கிற இயக்குநர் செந்தமிழன் இந்தப் படத்திற்காக ஆறு ஆண்டுகள் பழந்தமிழர்கள் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்.
படத்தின் உரையாடலுக்குப் பயன்படுத்தியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பல்வேறு தமிழ் இலக்கியங்களிலிருந்து தேடியெடுத்ததாம்.
பாலை படத்தின் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம். இவர் புகைப்படம், மாத்தியோசி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். வேத் சங்கர் என்பவர் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். “நான்கு பாடல்கள் படத்தில இருக்கு. இந்தப் பாடல்களுக்கு காயாம்பூ, வலன் ஆடியிருக்கும் நடனம் புதிய அசைவுகளுடன் இருக்கும்.
இன்னும் காடுகளில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களின் நடனம், நாட்டுப்புறப் பாடல்களை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கோம். முதுமக்கள் தாழி, கல் கத்திகளை செய்ய யாருமே கிடைக்கில
கிராமம் கிராமமா போய் ஆள் பிடிச்சி அதை செஞ்சோம்“ என்ற செந்தமிழனிடம் இவர் இயக்கிக் கொண்டிருந்த காதல் காட்சிகள் பற்றி கேட்டோம். “படம் ரிலீஸ் வரைக்கும் அது பத்தி அதிகம் சொல்ல முடியாது. அந்தக் கால மனிதர்களின் காதலும், காமமும் ஒளிவு மறைவு இல்லாம இருந்துச்சு. அதைப் பதிவு பண்ணியிருக்கோம். காயாம்பூ, வலன் உள்ளிட்ட எல்லாருமே நல்ல ஒத்துழைப்பு தர்றாங்க’ என்கிறார்.

No comments:
Post a Comment