சென்னையில் உள்ள நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் கட்சியின் சார்பு அமைப்பான ஆன்றோர் அவையம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன், தலைவர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் அறிவரசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின்னர் சீமான், சத்யராஜ், மணி வண்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
இலங்கை அதிபர் ராஜ பக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது. இது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக சட்டமன்ற வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வாகும். இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கச்சத் தீவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் நன்றி தெரிவிக்க உள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களிலும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதும் பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:
Post a Comment