தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ரிஷிவந்தியம் மக்கள் தங்களது ஓட்டுகளை பெருவாரியாக முரசு சின்னத்தில் அளித்து, என்னை வெற்றிபெற செய்ய முடிவு செய்துள்ளனர். இதை அறிந்த எதிர்க்கட்சியினர் தொகுதி முழுவதும் பணம் பட்டுவாடா செய்துள்ளனர்.
அதை தடுப்பதற்கான முயற்சியை, அதிகாரிகள் மேற்கொண்டதாக தெரியவில்லை.சில இடங்களில் நேர்மையான அதிகாரிகள் பணம் கொடுப்பதை தடுக்க முயன்றாலும், அவர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படுகின்றனர். மக்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி, பணம் கொடுத்து அவர்களின் ஓட்டுகளை விலைபேச நினைத்தாலும், மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர்.
ஊழல் செய்து சேர்த்த மக்கள் பணத்திலிருந்து தான், இந்த பட்டுவாடா நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்.பணம் கொடுத்து மக்களை விலைபேச பார்க்கின்றனர்.
ஆனால், அவர்கள் எந்த சூழலிலும் தங்கள் ஓட்டுரிமையை தவறாக பயன்படுத்த தயாராக இல்லை என்பது, தொகுதி முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்தபோது மக்களிடையே இருந்த மிகப்பெரிய எழுச்சியை கண்டபோது தெரிந்தது.
ரிஷிவந்தியம் தொகுதியின் எல்லா அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்வேன். குறிப்பாக, அனைத்து கிராமப்புற சாலைகளையும் தரமான சாலையாக சரிசெய்து கொடுப்பேன்.
மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் பஸ் வசதி செய்து தரப்படும்.அரசு கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி துவக்கப்படும்.
தடையில்லா மின்சாரம் ஏற்படுத்திட, மூங்கில் துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு மணிமுக்தா நதியில் இருந்து கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வசதி செய்து தரப்படும். அவசர சிகிச்சை பிரிவுகளுடன் கூடிய பொதுமருத்துவமனை கட்டித்தரப் படும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நவீனப்படுத்தி உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டு கிராம ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவேன். கரும்பு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்படும். தென்பெண்ணை, மணிமுக்தா, முசுகுந்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.
ரிஷிவந்தியம் தொகுதியில் சட்டசபை அலுவலகம் அமைத்து, அனைத்து நாட்களும் செயல்பட்டு மக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும்.மொத்தம் 114 ஊராட்சிகளையும், ஒரு பேரூராட்சியையும் கொண்ட ரிஷிவந்தியத்தை தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்’’என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment