டெசோ' (தமிழ் ஈழ ஆதரவாளர்கள்) அமைப்பு சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்து இருந்தார்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், `டெசோ' மாநாட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சட்டம்- ஒழுங்கு மற்றும் பொது மக்கள் நலன் கருதி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்தார்.
சென்னைக்கு வெளியே எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநாடு நடத்த அனுமதிப்பது பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் முடிவு செய்யலாம் என்றனர். இதைத் தொடர்ந்து போலீஸ் தரப்பில் டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 11 காரணங்களுக்காக மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் போலீஸ் தெரிவித்தது. போலீஸ் அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் அவசர மேல் முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் நேற்று மதியம் மனு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டெசோ மாநாட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டு பெஞ்சில் நிலுவையில் இருப்பதால் இந்த மேல் முறையீடு மனுவையும் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் விசாரணைக்கு அனுப்பி வைக்கிறேன்' என்றார்.
இதையடுத்து டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளே இந்த மனுவையும் விசாரிக்கும் படி தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இந்த மனு அவசர வழக்காக இன்று மதியம் 12 மணிக்கு நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணு கோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தி.மு.க. சார்பில் வக்கீல் வில்சன் ஆஜரானார்.
அவர் கூறியதாவது:-
சென்னை நகர போலீஸ் சட்டப்படி கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விண்ணப்பதாரர் விளக்கம் அளிக்க வாய்ப்பு தரவேண்டும். ஆனால் வாய்ப்பு தரவில்லை. மாநாட்டில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று காரணம் கூறுவது கற்பனையானது. மாநாட்டுக்கு 2,500 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. யார்- யார் பங்கேற்பார்கள் என்ற விவரம் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு தெரியும். கமிஷனர் எங்களிடம் விளக்கம் கேட்டு இருந்தால் பதில் கொடுத்து இருப்போம். ஆனால் அந்த வாய்ப்பை வழங்கவில்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அட்வகேட் ஜெனரல் நவநீதகிஷ்ணன் வாதாடும்போது கூறியதாவது:-
டெசோ மாநாடு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று மாநாட்டு அமைப்பாளர்கள் சார்பில் இன்று பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது.
நீதிபதிகள்: அது மாற்று ஏற்பாடு. அந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு நீங்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறீர்களா?
அட்வகேட் ஜெனரல்: கிடையாது. ஒலிபெருக்கியை பயன்படுத்த போலீசார் அனுமதியை பெறவேண்டும். இந்த மாநாட்டுக்கு மாநிலத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடும்போது நெரிசல் ஏற்படும். ஆனால் ஒம்.எம்.சி.ஏ. மைதானம் அந்த அளவுக்கு இடவசதி கிடையாது. இட நெருக்கடியால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும். சென்னை நகர மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கும் (இவ்வாறு கூறிய அவர் உளவுத்துறையின் ரகசிய அறிக்கை ஒன்றை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்).
நீதிபதிகள்: தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து நடத்தப்படும் கூட்டம் இல்லையே.
அட்வகேட் ஜெனரல்: டெசோ என்ற அமைப்பு பதிவு செய்யப்படாதது. அங்கீகரிக்கப்படாத ஒரு அமைப்பு கூட்டம் நடத்த அனுமதிக்க இயலாது. ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகத்திடம் தி.மு.க. மாநாடு என்று கூறி அனுமதி பெறப்பட்டுள்து. ஆனால் போலீசாரிடம் டெசோ மாநாடு என்று கூறி அனுமதி கோரப்பட்டுள்ளது. அவர்கள் ஏதோ ஒன்றை மறைக்கிறார்கள். மாநாடு நடத்த அனுமதித்தால் சென்னை மக்கள் பாதிக்கப்படுவார்கள். சென்னை பாதுகாக்கப்படுவது அவசியமாகும்.
வக்கீல் வில்சன்: கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை, பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது.
இவ்வாறு வாதம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து டெசோ மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் தடைவிதித்தனர். நிபந்தனையுடன் மாநாடு நடத்த அனுமதி அளித்தனர். ஒலிபெருக்கி மற்றும் பேனர்களுக்கு கட்டுப்பாடு விதித்தும், பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் மாநாடு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்னைகள் விதிக்கப்பட்டுள்ளது.

வணக்கம் ,
ReplyDeleteஉங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com