Friday, November 23, 2012

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்


உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 75.

கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் கடந்த 1957ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1958ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை பூலாவாரி ஊராட்சி தலைவராக இருந்தார். அதன் பிறகு அவர் 1970-76ல் பஞ்சாய்தது யூனியன் தலைவராக இருந்தார். பின்னர் 1973ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார்.

அவர் 6 முறை தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-67, 67-71, 71-76, 89-91, 96-2001, 2006-2011 ஆகிய காலங்கட்டங்களில் அவர் எம்.எல்..வாக இருந்தார். சேலம் திமுக வட்டாரத்தில் பெரிய சக்தியாக இருந்த அவர் 1989ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். பிறகு 1990-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டகங்களில் வேளாண் அமைச்சராக இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மியிடம் தோற்றார்.

அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


Thursday, November 1, 2012

”சோனியா நினைவு நாள்” ... அழைப்பிதழ் அனுப்பிய தமிழக காங்கிரஸ் கட்சி!


தமிழகக் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மீதான பாசத்துக்கே அளவு இல்லை போலும்! தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நினைவுநாள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தி அறிக்கையில், "அன்னை சோனியா காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு" என்று அனுப்பி வைக்க அனைவருமே பதறிப் போயினர்!

அனைத்து ஊடகங்களுக்கும் மின் அஞ்சல் மூலம் "அன்னை சோனியா நினைவு நாள்" நிகழ்ச்சி அழைப்பிதழை அனுப்பிவிட்டுவிட்டனர். செய்தியாளர்கள்தான் பதறியடித்துக் கொண்டு காங்கிரஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்க "திருத்தப்பட்ட" அழைப்பிதழை அனுப்பி வைத்தனர்.

"தட்டச்சுப் பிழையால் இத்தகைய தவறு நேர்ந்துவிட்டது, திருத்திய செய்தியை வெளியிடவும்" என்று விளக்கம் வேறு!

அப்ப காங்கிரஸ் கட்சியில் அன்னை என்றால் சோனியா மட்டும்! அது எட்டானாலும் எழவானாலுமா? பெருங்கூத்தாக இருக்கிறதே!