Friday, March 30, 2012

'கொலை வெறி' புகழ் 3 பட வீடியோ பாடல்கள் ...












''விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி-சேலை கொடுத்தார்; 6 பேருக்கு அடி-உதை விழுந்தது''!


தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி- சேலை கொடுத்தார். 6 பேருக்கு அடி-உதை விழுந்தது. தானே புயல் நிவாரணம் பற்றி குறை சொல்ல இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

தேமுதிகவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேசுகையில், மின்வெட்டால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன, தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்றார். அப்போது நடந்த விவாதம்,

முதல்வர் ஜெயலலிதா (குறுக்கீட்டு): சிறு குறு தொழிற்சாலைகளுக்கு ஜெனரேட்டர் வைக்க ரூ.5 லட்சம் மானியம் அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறேன். மின்வெட்டு குறித்து நேற்று நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. மின் உற்பத்திக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம் என்பதை தெளிவாக கூறினேன். ஜூன் மாதம் முதல் மின்வெட்டு குறையும் என்பதையும் எடுத்துக் கூறினேன்.

இவ்வளவு கூறிய பிறகும் குறை கூறினால் என்ன சொல்வது, தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல் நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்?

மோகன்ராஜ்: மின்சார வெட்டினால் சிறுதொழில் பாதிக்கப்பட்டதைதான் நான் கூறினேன்.

ஜெயலலிதா: மின்சார நிலைமை பற்றி நான் நேற்று 110-வது விதியின் கீழ் பேசிய பேச்சின் நகல் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. அதை உறுப்பினர் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

மோகன்ராஜ்: நான் கூறுவது வேறு பிரச்சனை.

அமைச்சர் சி.வி. சண்முகம்:- தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அரசும் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்தார். 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறார். அதன் பிறகும் குறை சொல்வது சரியல்ல.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: அவரது தலைவர் (விஜய்காந்த்) 6 பேருக்கு வேட்டி- சேலை கொடுத்தார். 6 பேருக்கு அடி-உதை விழுந்தது. தானே புயல் நிவாரணம் பற்றி குறை சொல்ல இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார்.

இதற்கு தேமுதிகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர்.


மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்


மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணணயத்திடம் முறையிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மின்சார கட்டணத்தை உயர்த்தாததால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆணையத்திடம் எடுத்து கூறியது.  அதனால் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என முடிவு செய்து மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த நவம்பர் சமர்ப்பித்தது.

அதைத்தொடர்ந்து ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மின்கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டனர்.   இதையடுத்து மின்சார கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம், வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடு, கட்டணம் எவ்வளவு அதிகரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கு கட்டண உயர்வு எப்படி அமல்படுத்துவது குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை வெளியிட மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

இன்று அறிவிக்கப்படும் மின்கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து அமுலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?


திருச்சியில் நேற்று காலை கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு ஏகப்பட்ட எதிரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாராவதுதான் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கே.என்.நேருவின் வலதுகரம் மற்றும் இடதுகரமாக விளங்கி வந்தவர் ராமஜெயம். மிகக் குறுகிய காலத்திலேயே கே.என்.நேருவும், ராமஜெயமும் திருச்சி மாவட்டத்தின் அசைக்க முடியாத பிரமுகர்களாக மாறியவர்கள். இருவரும் இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டதால் திருச்சி திமுக இவர்கள் வசமானது.

திருச்சி திமுகவில் மட்டுமின்றி, மாவட்டத்திலும் கூட இவர்களை மீறி எதுவும் நடக்காது என்ற நிலைதான் கடந்த திமுக ஆட்சியின்போது நிலவியது. குறிப்பாக ராமஜெயத்தைப் பிடித்தால் ஆகாத காரியம் இல்லை என்ற அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் கொடி கட்டிப் பறந்துள்ளார் ராமஜெயம்.

நேருவுக்கு உற்ற துணையாக இருந்து அத்தனை காரியங்களையும் பார்த்து வந்தார் ராமஜெயம். தேர்தல்களின்போது இவர்தான் தி்ட்டமிடுதல், களப் பணியாற்றுதல், இன்ன பிற பணிகள் என அத்தனையையும் பார்ப்பார்.

குவாரி, ரியல் எஸ்டேட், பொறியியல் கல்லூரி என ஏகப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்தார் ராமஜெயம். அதேபோல கட்டப் பஞ்சாயத்தும் செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. தனது அண்ணனின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ராமஜெயம் பல கட்டப் பஞ்சாயத்துக்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இவருக்கு எதிரிகளும் அதிகம் என்கிறார்கள். குறிப்பாக இவருக்குச் சொந்தமான என்ஜீனியரிங் கல்லூரிக்குத் தேவையான இடத்தை ஆக்கிரமித்து கட்டியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலம் தொடர்பாக மோதல்கள், வழக்குகள் உள்ளன.

மேலும் கடந்த திமுக ஆட்சியின்போது ரியல் எஸ்டேட் அதிபரையும், அவரது தம்பியையும் காரில் வைத்து உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொலை செய்தனர் சிலர். இந்த கொலைக்குக் காரணமே ராமஜெயம்தான் என்று அப்போது பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் நடந்தது திமுக ஆட்சி என்பதால் ராமஜெயம் மீது காவல்துறை கரங்கள் படியவில்லை.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ராமஜெயம் மீதும்,நேரு மீதும் ஏகப்பட்ட வழக்குகள் பாய்ந்தன பெரும்பாலும் நில மோசடி வழக்குகளே தொடரப்பட்டன.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன், திருச்சி கலைஞர் அறிவாலயத்தை கட்ட தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக கே.என்.நேரு, ராமஜெயம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதேபோல் ராமஜெயம் மீது திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலை அபகரிக்க முயற்சித்ததாக ஒரு வழக்கும், திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஒரு வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

கே.கே.நகர் பகுதியை சேர்ந்த மொரைஸ் என்பவர் விமானநிலைய போலீசில் ஒரு புகார் கொடுத்து இருந்தார். அதில், தனது நிலத்தை ஏமாற்றி மோசடி செய்து, அங்குள்ள திருவள்ளூர் சிலையை சேதப்படுத்தியதாகவும் கே.என்.நேரு, அவருடைய தம்பி ராமஜெயம் உள்பட சிலர் மீது புகார் கொடுத்து இருந்தார்.

இந்த புகார்களின் அடிப்படையில் ராமஜெயம் மீது 4 வழக்குகளை போலீசார் பதிவு செய்து இருந்தனர். இந்த நில மோசடி புகார்களில் சிக்கிய ராமஜெயம் சில மாதங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு கோர்ட்டில் ஜாமீன் பெற்று தில்லைநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

இப்படி ஏகப்பட்ட எதிரிகள், எதிர்ப்புகள், தொழில் போட்டிகள், வழக்குகள் புடை சூழ வலம் வந்த ராமஜெயத்தை முன்விரோதம் காரணமாகவே யாரோ சிலர் கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அதேசமயம், இது அரசியல் ரீதியான கொலையாகத் தெரியவில்லை என்றும் மக்களிடையே பேச்சு அடிபடுகிறது.

எப்படி இருப்பினும், திருச்சி மாவட்டத்தில் மிக முக்கியப் பிரமுகரமாக வலம் வந்த ஒருவரான ராமஜெயம் கை, கால்களைக் கட்டி கொலை செய்யப்பட்டிருப்பது திருச்சி மக்களை அதிர வைத்துள்ளது.


சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்கிறது அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு


இலங்கையில் போருக்கு பின் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்து இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த குழு இலங்கை செல்ல இருந்தது. ஆனால் 5 மாநில தேர்தல் காரணமாக இந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிந்து விட்டதால், அடுத்த மாதம் (ஏப்ரல்) எம்.பி.க்கள் குழுவினர் இலங்கை பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

இது பற்றி பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது-

இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு நான் தலைமை தாங்கி செல்கிறேன். இந்த குழுவினர் அடுத்த மாதம் 16ஆம் தேதி புறப்பட்டு செல்கிறோம். 21ஆம் தேதி திரும்புகிறோம்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்று இருக்கும் நிவாரண பணிகளை எம்.பி.க்கள் பார்வையிடுகிறார்கள். மேலும், தமிழர்களின் வாழ்க்கை நிலையையும் நேரில் பார்க்கிறோம்.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார். 


தனது சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார்? : சொல்கிறார் சச்சின்


இந்தியாவின் மாஸ்டர் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர். தனது பதினாறாவது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 

டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே. வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் முதலாவது இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். 

அனைத்துலகப் போட்டிகளில் மொத்தமாக நூறு நூறுகளை எட்டிய முதலாமவரும் இவரே.

நாட்டின் முன்னணி தொழிலதிபரும், மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல். அணியின் உரிமையாளருமான முகேஷ் அம்பானி சார்பில் சச்சின் தெண்டுல்கருக்கு மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது.

அப்போது தனது சத சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார் என்பது குறித்து சச்சின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது-

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான விராட் கோஹ்லியோ அல்லது ரோகித் சர்மாவோ தான் என்னுடைய சாதனையை முறியடிப்பார் என நான் கருதுகிறேன்.

அதற்கான உத்வேகமும் திறமையும் அவர்களிடம் உள்ளது. மேலும், அவர்கள் ஆபத்தான நேரத்தில் களத்தில் நின்று ஆடுகிறார்கள்.

இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.


Thursday, March 29, 2012

ஏப்ரல் 13ம் தேதி முதல் 'துப்பாக்கி'...?


விஜய் ரசிகர்கள் இப்போது ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருப்பது 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOK எப்போது என்பது தான்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

விஜய், காஜல் அகர்வால் நடனமாடிய ஒரு பாடலை பாங்காக்கில் படமாக்கி இருக்கிறார்கள். இதுவரை 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிந்துள்ளது.

சத்யன் காமெடியனாகவும், ஜெயராம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும், வித்யூத் ஜாம்வால் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன்.

பாதி படப்பிடிப்பு முடிந்து விட்ட காரணத்தால் படத்தின் FIRST LOOK எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏப்ரல் 13ம் தேதி படத்தின் FIRST LOOK வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

'துப்பாக்கி' திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரசிகர்களின் இதயத்தைக் குறிவைத்து வருகிறது.

 'துப்பாக்கி'ல விஜய்யோட Look-அ மாத்தியிருக்காங்களாம்..  First Look- ல விஜய்யோட புது Look-அ பாக்கலாம்! "