முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டு 15 நாட்கள் ஆகிறது. அவரை கடத்தி கொன்ற கொலையாளிகளை 7 தனிப்படையில் உள்ள 105 போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
ராமஜெயத்தை தொழில் போட்டி, ரியல்எஸ்டேட் பிரச்சினை, பஞ்சாயத்து விவகாரம், காதல் திருமண விவகாரம் இவற்றில் ஏதாவது ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிருக்கலாம் என தனிப்படை போலீசார் சந்தேகித்தனர்.
இது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு காதல் ஜோடி பற்றியும் ராமஜெயத்தால் பாதிக்கப்பட்ட, வங்கி அதிகாரி பற்றியும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே திருச்சியில் பணியாற்றி அந்த வங்கி அதிகாரியை ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் வைத்து துருவி, துருவி போலீசார் விசாரித்தனர்.
ஆனால் இதில் போலீசாருக்கு எந்த தகவலும் கிடைக்க வில்லை. இந் நிலையில் திருச்சியில் பல வழக்குகளில் தொடர்புடைய 3 ரவுடிகளை போலீசார் திண்டுக்கல், மதுரை, சேலம் பகுதிகளில் வைத்து மடக்கினர். அவர்களை திருச்சி அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது ராமஜெயத்தை கடத்த பயன்படுத்திய கார் குறித்தும் தில்லைநகர் வாலிபர் ஒருவர் குறித்தும் முக்கிய தகவல் கிடைத்தன.
இந்த கொலை காதல் திருமண ஜோடி விவகாரத்தில் நடத்திருக்கலாம் என்று தெரிய வந்தது. ரவுடிகளிடம் நடத்திய விசாரணையின் அடைப்படையில் காதல் திருமண ஜோடியை வீட்டில் தேடினர். அந்த வீடு பூட்டபட்டிருந்ததால் அவர்களின் சொந்த ஊரான சாத்தான்குளம் பகுதியில் தேடினர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை.
இந்நிலையில் காதல் திருமண ஜோடியை தேடி தனிப்படை நாகை மற்றும் புதுவையில் முகாமிட்டு உள்ளது. ராமஜெயத்தை கொலை செய்த கும்பல் கார் மூலம் கொள்ளிடம் செக்போஸ்ட் அல்லது டி.வி.எஸ்.டோல்கேட், மதுரை ரேடு, விராலிமலை செக்போஸ்ட் வழியாக சென்றால் ரகசிய காமிராவில் சிக்கி விடுவோம் என நினைத்து திருவளர்ச்சோலை, கல்லனை வழியாக தஞ்சை சென்றிருக்கலாம். அல்லது நாகை வழியாக புதுச்சேரி சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ராமஜெயம் கொலையில் கடந்த 15 நாட்களாக நடந்த விசாரணையில் தற்போது உண்மையான குற்றவாளிகளை தனிப்படை நெருங்கி விட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநகர் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தனிப்படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தெடர்ந்து இப்போது குற்றவாளியை தனிப்படை மிகவும் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
தனிப்படை போலீசார் திருச்சி விமான நிலையத்தில் கடந்த 20 நாட்களில் வெளிநாடு சென்ற பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருச்சி வந்த பயணிகள் பட்டியல் மூலம் விசாரணை நடத்தியதன் மூலமும், குற்றவாளிகளை பற்றி முக்கிய துப்பு கிடைத்து விட்டதாக தெரிகிறது. ஓரிரு நாளில் போலீசாரிடம் இருந்து குற்றவாளிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
No comments:
Post a Comment