கேரள கடலில் தமிழக மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து, இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சம்பவம் நடந்த கப்பலையும் போலீசார் கைப்பற்றி, தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
இந்த கப்பலை விடுவிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் இத்தாலி கப்பல் கம்பெனி தாக்கல் செய்த மனு ஏற்கப்படவில்லை. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கப்பல் கம்பெனி அப்பீல் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இதுகுறித்து மத்திய அரசு, கேரள அரசு, கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில், அதன் வக்கீல் (கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்) ஹரின் ராவல் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், சம்பவம் நடுக்கடலில் நடந்துள்ள நிலையில், அதில் விசாரணை நடத்தவோ, கப்பலை பிடித்து வைக்கவோ கேரள போலீசாருக்கு அதிகார வரம்பு இல்லை என்று கூறப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரள முதல்-மந்திரி இதுபற்றி கருத்து கூறும்போது, மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்தே இந்த வழக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், சம்பவம் இந்திய கடல்பகுதியில்தான் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்படவும் இல்லை. பதில் மனு தாக்கல் செய்யும்படி அரசு வக்கீலை அறிவுறுத்தவும் இல்லை என்று மத்திய அரசு கப்பல் துறை அமைச்சகம் மறுத்தது.
இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி கொச்சியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல் தெரிவித்த கருத்து, மத்திய அரசின் நிலையை எதிரொலிக்கவில்லை.
இது தொடர்பாக நான் சொலிசிட்டர் ஜெனரலிடம் பேசினேன். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல் இனி ஆஜராக அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டார் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment