மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. சமீபகாலமாக அங்கு மம்தாபானர்ஜி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியபடி உள்ளன.
கடந்த மாதம் ரெயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதற்காக தன் கட்சியைச் சேர்ந்த மூத்த மந்திரி தினேஷ் திரிவேதியை கட்சியில் இருந்தே ஓரம் கட்டினார். சமீபத்தில் மம்தாவை கிண்டல் செய்து கார்ட்டூன் வரைந்த 2 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த பரபரப்பு ஓய்வதற்குள் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அடுத்த அதிரடியை மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களிடம் எந்த ஓட்டும் உறவும் இல்லாமல் இருக்கும்படி கூறியுள்ளது.
இதுதொடர்பாக மேற்கு வங்க உணவு மந்திரி ஜோதிபிரியா மல்லிக் கூறியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்காரர்கள் வீட்டில் திருமணம் செய்வதை திரிணாமுல் காங்கிரசார் தவிர்க்க வேண்டும். கம்யூனிஸ்டுகாரர்களிடம் எந்த உறவும் நமக்கு வேண்டாம். சொந்தக்காரர்களாக இருந்தால்கூட அவர்களிடம் சம்பந்தம் வேண்டாம். இன்னும் சொல்லப் போனால், கம்யூனிஸ்டுகளிடம் பேசுவதைக்கூட கைவிடவேண்டும்.
டீக்கடையில் அவர்களுடன் சகஜமாக பேசக்கூடாது. அவர்களது உறவே நமக்கு வேண்டாம். கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்களுடன் நாம் தொடர்ந்து பழகி வந்தால், அவர்களை எதிர்க்க இயலாமல் போய்விடும். மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் உங்கள் உறவினராக இருந்தால்கூட இப்போதைக்கு சற்று ஒதுக்கி வையுங்கள்.
அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் வரையிலாவது கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு வேண்டாம். திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த ஒவ்வொரு தொண்டனும் இதில் உறுதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு உணவு மந்திரி ஜோதிபிரியா கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியின் இந்த பேச்சு மேற்கு வங்க அரசியலில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இதற்கு கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் முகம்மது சலீம் கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது. கிராமத்து மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி பழகக்கூடியவர்கள். அந்த கலாசாரத்தை சீரழித்துள்ளனர். மக்களை ஒருவரை ஒருவர் எதிரி ஆக்கும் வகையில் ஆளும் கட்சியே பேசுவது வருத்தத்துக்குரியது என்றார்.
தொண்டர்கள் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையே அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் தான் முடிவு செய்ய வேண்டுமா ....
No comments:
Post a Comment