உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முலாயம்சிங்கின் மகன் அகிலேஷ் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெறவேண்டும் என்ற லட்சியத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா தீவிர பிரசாரம் செய்தார். குறிப்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி 3 மாதம் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு கிராமம், கிராமமாக சென்று தீவிர பிரசாரம் செய்தார்.
ஆனால் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியையே தழுவியது. மொத்தம் உள்ள 403 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 23 இடங்களே கிடைத்தது. சில கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்ததால்தான் இந்த அளவுக்காவது காங்கிரசுக்கு இடம் கிடைத்ததாக கூறப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் கிடைத்த படுதோல்வி காங்கிரஸ் தலைவர்களால் ஜீரணிக்க முடியாதபடி உள்ளது. 3 மாதம் பிரசாரம் செய்த ராகுல்காந்திக்கும் இந்த படுதோல்வி புரியாத புதிராக உள்ளது. தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்ய உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அவர்களுடன் ராகுல்காந்தி இன்று (வியாழன்) முதல் ஆலோசனையைத் தொடங்கியுள்ளார்.
தேர்தலில் 20 ஆயிரம் ஓட்டுக்கு மேல் வாங்கி தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் ராகுல் அழைப்பு விடுத்துள்ளார். அவர்களிடம் கருத்துக்கள் கேட்டு அறிந்த பிறகு ராகுல் முக்கிய முடிவுக்கு வருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment