மதுரையில் திமுக பொருளாளர் மு.க. ஸடாலின் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மேயர் குழந்தைவேலுவும், மாஜி எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சாவும் ஒருவரை ஒருவர் அடிக்கப் பாய்ந்தனர்.
முன்னாள் துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய மதுரை வந்திருந்தார். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் திமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மண்டல தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநகர் செயலாளர் தளபதி சிலைக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தபோது திமுக நிர்வாகிகள் கீழே போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக நின்றனர். மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சா, இளைஞரணி செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வந்த மாவட்ட நிர்வாகிகள் குழந்தைவேலுவை மறைத்து நின்றனர். இதனால் கோபம் அடைந்த குழந்தைவேலு அனைவரையும் தள்ளிவிட்டு முன்னால் வந்தார். அப்போது அவர் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சாவையும் தள்ளிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கவுஸ் பாட்சா குழந்தைவேலுவை அடிக்கப் பாயந்தார். உடனே அவரும் கவுஸ் பாட்சாவை அடிக்கப் பாய்ந்தார். இருவருக்கும் இடையே கடும் தளளுமுள்ளு ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
இதை பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் திமுகவினர் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment