இந்தோனேசியா கடல் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்திலும் நில அதிர்வு இருந்தது. "நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் எந்த நில அதிர்வும் இல்லை'' என்று கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இந்தோனேசியா கடலில் உருவான நிலநடுக்கத்தின் தாக்கமாக, கூடங்குளம் பகுதியில் எந்த நில அதிர்வும் இல்லை. நில நடுக்கம், சுனாமி பற்றிய தகவல்களை உடனுக்குடன் அளிப்பதற்காக, ஐதராபாத்தில் கடல்சார் தகவல்களை அளிக்கும் இந்திய தேசிய மையம் செயல்பட்டு வருகிறது. நாங்கள் அதில் அங்கம் வகிக்கிறோம்.
அந்த வகையில் நேற்று இந்தோனேசியா நிலநடுக்கம் பற்றி எங்களுக்கு உடனடியாக முன் எச்சரிக்கை தகவல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து விழிப்புணர்வாக செயல்பட்டோம். மாலை 6.30 மணி அளவில் ஐதராபாத் மையத்தில் இருந்து `சுனாமி வர வாய்ப்பு இல்லை' என்று மீண்டும் தகவல் வந்தது. அணுமின் நிலையத்தில் வழக்கமான வேலைகள் நேற்று நடைபெற்றன. நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.
நேற்றைய பூகம்பத்தால் சுனாமி எதுவும் ஏற்படவில்லை. ஒருவேளை சுனாமி தாக்கி இருந்தாலும் அதன் மூலம் அணு உலைக்கு எந்த பாதிப்பும் வந்து இருக்காது. கடல் மட்டத்தில் இருந்து 7.5 மீட்டர் உயரத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளதால் சுனாமியால் எந்த ஆபத்தும் வராது. அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது.
இவ்வாறு அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி கூறினார்.
இது போல கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலைய பகுதியிலும் நில அதிர்வு இல்லை என்றும், அணுமின் நிலையம் வழக்கம்போல் செயல்பட்டதாகவும் அதன் இயக்குனர் ஜே.பி.குப்தா தெரிவித்தார்.
No comments:
Post a Comment