ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், வருகிற ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். ஓய்வுக்கு பின்பு, ஜனாதிபதிகள் அரசு அளிக்கும் இல்லத்தில் தங்கி கடைசி காலத்தை கழிப்பது மரபாக உள்ளது. இதற்காக டெல்லியிலோ அல்லது அவர்களது சொந்த மாநிலத்திலோ அரசு செலவில் வீடு கட்டி கொடுக்கப்படும்.
பிரதீபா பாட்டீல் சொந்த மாநிலத்திலேயே வசிக்க விரும்பியதால், மராட்டிய மாநிலம் புனேயில் வீடு கட்டி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ராணுவத்துக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிக செலவில் புதிய பங்களா கட்டப்பட உள்ளதால், எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், எதிர்ப்பையும் கண்டனத்தையும் பொருட்படுத்தாமல், கட்டுமான பணியை அரசு தொடங்க உள்ளது.
நிலம் எடுக்கப்பட்டதிலோ, அல்லது பங்களா கட்டப்படுவதிலோ மரபு எதுவும் மீறப்படவில்லை, என்றும் மத்திய அரசும், ஜனாதிபதி மாளிகையும் விளக்கம் அளித்துள்ளது.
பிரதீபா பாட்டீலுக்காக கட்டப்பட உள்ள ஓய்வுகால பங்களா, அங்கு எற்கனவே உள்ள பிரிட்டிஷ் காலத்து 2 பங்களாக்களை இடித்து தள்ளிவிட்டுதான் அமைக்கப்பட இருக்கிறது. இதுவரை எந்த ஜனாதிபதிக்கும் டெல்லிக்கு வெளியே ஓய்வுகால பங்களா கொடுக்கப்படவில்லை என்ற மரபு இருந்தாலும், முந்தைய ஜனாதிபதிகள் அதை விரும்பியதும் இல்லை.
முதல் ஜனாதிபதியான ராஜேந்திரபிரசாத், பதவிக்காலம் முடிந்த பின்பு சொந்த மாநிலமான பீகாரில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு திரும்பினார். அடுத்து ஜனாதிபதிகள் டாக்டர் ராதாகிருஷ்ணன், வி.வி. கிரி, சஞ்சீவ் ரெட்டி, ஆகியோர் பதவிக்காலம் முடிந்த உடன் சொந்த ஊருக்குச் சென்று பூர்வீக வீட்டில்தான் வாழ்ந்தனர்.
ஆர்.வெங்கட்ராமன், சென்னையில் சிறிது காலம் தங்கி இருந்தார். கடைசி காலத்தில்தான் டெல்லியில் அரசு பங்களாவில் வசித்தார். ஜெயில்சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் ஆகியோர் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறியதும், டெல்லியில் உள்ள அரசு பங்காளவுக்கு சென்றனர்.
பிரதீபா பாட்டீலுக்கு முன்பு ஜனாதிபதி பதவி வகித்த அப்துல்கலாமும் டெல்லி அரசு பங்களாவில்தான் தங்கியுள்ளார். தற்போது பிரதீபா பாட்டீலுக்குதான் முதல் முறையாக டெல்லிக்கு வெளியே அரசு செலவில் பங்களா கட்டப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே, பிரதீபாபாட்டிலுக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பின. பதவி ஓய்வு பெறும் போதும் அவருக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது.
No comments:
Post a Comment