திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீரென தலைமறைவான காதல் ஜோடியை தேடி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் திருச்சி போலீசார் முகாமிட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 29-ந் தேதியன்று ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை எந்தத் துப்புமே போலீசாருக்குக் கிடைக்கவில்லை. தூத்துக்குடி கவுன்சிலர் சாந்தி உட்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்திப் பார்த்துவிட்டனர். இன்னமும் குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை.
இந்த நிலையில் ராமஜெயத்தின் செல்போன் எண்களுக்கு கடந்த பல மாதங்களாக வந்த தொலைபேசி அழைப்புகள், ராமஜெயம் பேசிய தொலைபேசி எண்களை போலீசார் ஆராய்ந்தனர். இதில் சாத்தான்குளம் காதல் ஜோடியினரிடம் அதிகமாக ராமஜெயம் பேசியது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டாக இந்த காதல்ஜோடியிடம் ராமஜெயம் பேசிவந்திருக்கிறார்.
மேலும் திருச்சியில் தங்கியிருந்த காதல் ஜோடி, ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட 48 மணிநேரத்தில் திருச்சியைவிட்டு எஸ்கேப்பாகிவிட்டது. இப்போது காதல்ஜோடி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. இதனால் அவர்களது சொந்த ஊரான சாத்தான்குளத்தில் முகாமிட்டுள்ள திருச்சி போலீசார் அந்த ஜோடியின் உறவினர்களிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருச்சியை சேர்ந்த கூலிப்படை தலைவன் சாமி ரவி, காதர் மொய்தீன், மோகன், அய்யாசாமி ஆகியோரை தூக்கி வந்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment