இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் செயல்பாடுகள் அனைத்துமே லிபியா அதிபர் கடாபி, ஈராக் அதிபர் சதாம் உசேன் ஆகியோர் சென்ற பாதையிலேயே இருக்கிறது என்று ஜே.வி.பி. (ஜனதா விமுக்தி பெரமுனா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசநாயக்கே கூறியுள்ளதாவது:
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா விதித்துள்ள தடையான இலங்கையின் பொருளாதாரத்தை நடப்பு ஆண்டில் மிகக் கடுமையாகப் பாதிக்கும். நாட்டின் அன்னிய முதலீடு 8 பில்லியன் டாலரில் இருந்து 5 பில்லியன் டாலராகக் குறைந்துவிட்டது.
அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்போவதாக அறிவிக்கிறது. ஆனால் இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. நாடு இப்போது மிகப் பெரிய பொருளாதார சிக்கலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
லிபிய தலைவர் கடாபி மற்றும் இராக் தலைவர் சதாம் ஹுசைன் போன்றவர்கள் சென்ற பாதையிலேயே இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அரசும் சென்று கொண்டிருக்கிறது. இலங்கையும் இப்போது ஒரு மாற்றத்தை நோக்கி செல்ல இருக்கிறது. மக்கள் இதற்குத் தயாராக இருக்க வேண்டும். வெள்ளை வேன் மூலம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதும் பிணையத் தொகை வசூலிப்பதும் சட்டத்தின் ஒரு பாதியாகி விட்டது.
நாட்டின் அனைத்து துறைகளுமே படுமோசமான முறையில் வீழ்ச்சிக் கண்டுள்ளது. நிதி நெருக்கடி மேலோங்கி சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு அரசாங்கம் விழுந்துள்ளது. மக்கள் மீது அன்றாடம் வரிச் சுமைகளை அரசு சுமத்தி வருகிறது. இந்தப் போக்கை கைவிட வேண்டும் என்றார் அவர்.
மகிந்த பேச்சு
சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகிந்த ராஜபக்சே, கடாபியைப் போல இலங்கை மக்கள் என்னைக் கொல்லமாட்டார்கள்.. என் மீது பாசம் வைத்திருக்கின்றனர் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் சிங்கள தீவிரவாத அமைப்பான ஜே.வி.பி தரப்பில், கடாபியைப் போல செயல்படுகிறார் ராஜபக்சே என்று கூறியிருப்பது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment