அக்கா சசிகலா, அவரது 'அக்கா' ஜெயலலிதாவுடன், மீண்டும் இணைந்த நிலையில் தனக்கு ஜாமீன் கிடைத்தது தொடர்பாக மகிழ்ச்சியில் இருந்து வந்த சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு நேற்று புது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் மீது நேற்று புதிதாக ஒரு வழக்குப் பாய்ந்து அதில் அவரைக் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி கிராமம் கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில் மணல் அள்ளுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. ஆனாலும் மன்னார்குடியை சேர்ந்த சசிகலா தம்பி திவாகரன், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா பாப்பாகோவிலை சேர்ந்த கார்த்திகேயன், அறந்தாங்கியை சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூவரும் ஆட்களை வைத்து அங்கு தொடர்ந்து மணல் அள்ளி வந்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் காவிரி வடிநிலக்கோட்ட பொதுப்பணித்துறை பிரிவு அலுவலர் சவுந்தர்ராஜன் தஞ்சை எஸ்பி அனில்குமார் கிரியிடம் புகார் தெரிவித்தார். எஸ்பி உத்தரவின்பேரில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 28ம் தேதி கார்த்திகேயனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திவாகரனை, இந்த வழக்கில் கைது செய்த தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று அவரை பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ராமலிங்கம், திவாகரனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திவாகரன் மீண்டும் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
திவாகரன் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில் முதலில் ஒரு வழக்கில் ஜாமீ்ன் கிடைத்தது. ரிஷியூரில் பெண் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய வழக்கில் சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. முதல்வர் ஜெயலலிதாவுடன், சசிகலா மீண்டும் இணைந்த அடுத்த சில நாட்களில் விசாரணைக்கு வந்த இந்த ஜாமீ்ன் மனு மீதான விசாரணையின்போது அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. இதனால் திவாகரனுக்கு எளிதாக ஜாமீன் கிடைத்தது.
இதனால் திவாகரன் தரப்பு பெருத்த நம்பிக்கையில் இருந்தது. ஆனால் நேற்று மணல் அள்ளிய வழக்கைப் போட்டு திவாகரனின் நம்பிக்கையில் மண்ணைப் போட்டு விட்டனர்.
No comments:
Post a Comment