திருச்சி மன்னார்புரம் ராணுவ குடியிருப்பு காலணியில் வசித்து வருபவர் சவுகாத். ராஜஸ்தான் மாநிலம் சிகாட் மாவட்டத்தை சேர்ந்த இவர் இந்திய விமானப்படையின் அதிகாரி ஆவார். தற்போது திருச்சி கிராப்பட்டியில் உள்ள என்.சி.சி. விமானப்பிரிவு பட்டாலியனில் கமாண்டன்ட் ஆக உள்ளார்.
இவரது மகள் அனிதா (வயது 25). வேதியியலில் முதுகலை பட்டம் பெற்ற இவர் திருச்சி பொன்னகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார்.
கல்லூரிக்கு மகள் அனிதா தினமும் காலையில் செல்லும் போது சவுகாத் காரில் அழைத்து செல்வார். மேலும் மாலையில் கல்லூரி முடிந்ததும் காரில் திரும்ப அழைத்து வருவார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு அனிதா தோழி ஒருவருடன் சென்றார். மாலையில் கல்லூரி முடிந்த பின்னரும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவருடைய தந்தை சவுகாத் நேராக கல்லூரிக்கு சென்று விசாரித்தார். ஆனால் அனிதா அங்கு இல்லை. மதியமே வெளியே சென்று விட்டதாக கூறினார்கள். அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் பதறிப்போன சவுகாத் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சவுகாத் நேற்று புகார் செய்தார்.
அதில் கல்லூரிக்கு சென்ற என் மகள் அனிதா வீடு திரும்பவில்லை என தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அனிதாவை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது காதல் விவகாரம் ஏதேனும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment