மதுரையில் கடந்த 15-ந் தேதி தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சியை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். புறநகர் மாவட்டத்திலும், மாநகர் மாவட்டத்திலும் தனித்தனியாக நேர்காணல் நடந்தது.
அதன்பின் தமிழக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து அன்று மாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.இது குறித்து மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புகளில் உள்ள 17 பேருக்கு விளக்கம் கேட்டு தி.மு.க. தலைமை நோட்டீசு அனுப்பியது.
இந்த நிலையில் சீன நாட்டுக்கு சென்று இருந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரி நேற்று மதியம் விமானம் மூலம் மதுரை வந்தார். அவருடன் மனைவி காந்தி அழகிரியும் வந்தார். விமான நிலையத்தில் மத்திய மந்திரி மு.க.அழகிரியிடம் நிருபர்கள் பேட்டி கேட்டனர்.
அப்போது அவரிடம் மதுரையில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடந்ததே? என்று கேட்டனர். அதற்கு மு.க.அழகிரி அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அப்போது சீனாவில் இருந்தேன். இப்போதுதான் வருகிறேன். நேர்காணல் பற்றி எனக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றார்.
மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத தி.மு.க. நிர்வாகிகள் 17 பேருக்கு விளக்கம் கேட்டு தலைமை கழகம் நோட்டீசு அனுப்பியுள்ளதே என்று கேட்டதற்கு, இப்போதுதான் மதுரைக்கு வந்துள்ளேன். எனவே அதுபற்றியும் எனக்கு தெரியாது என்று அவர் பதில் அளித்தார்.
மதுரையில் தி.மு.க. நிர்வாகிகள் 17 பேரும் ரகசியமாக கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, இதுபற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. மேலும் விசாரித்த பின்னர் எதுவும் சொல்ல முடியும் என்றார்.
மதுரை வந்த மு.க.ஸ்டாலினை தி.மு.க.வினர் யாரும் வரவேற்கவில்லையே என்று கேட்டபோது, யாரையும் வரவேற்க வேண்டும் என்ற சட்டம் தி.மு.க.வில் இல்லை என்றார். அதன்பின் மு.க.அழகிரி வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.
No comments:
Post a Comment