கேரள மாநில முன்னாள் முதல்வரும், தற்போது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அச்சுதானந்தன், பல்வேறு பிரச்னைகளால் விரக்தியின் உச்சத்தில் இருந்து வருகிறார். அவருக்கு கட்சிக்குள்ளேயும், வெளியேயும் கடும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
உறவினருக்கு நிலம் ஒதுக்கியது, மகன் அருண்குமாருக்கு அரசு பணி வழங்கியது, கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் குறித்து அவமரியாதையாக பேசியது என, பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரிய பதவியான, அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் பதவி தனக்கு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்தார். கோழிக்கோட்டில் சமீபத்தில் நடந்த தேசிய மாநாட்டில் அவருக்கு அப்பதவியை கட்சி மேலிடம் வழங்காமல், அவரது வயதை காரணம் காட்டி நிராகரித்து விட்டது.
தற்போது, தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என, சிலர் போராடி வருவதற்கு அச்சுதானந்தன் ஆதரவு தெரிவித்திருந்தார். மேலும் இன்று அவர் கூடங்குளத்திற்குச் சென்று, போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவிக்க இருந்தார்.
இது தமிழகத்தில் அக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரானதாக அமைந்து விட்டது. தமிழகத்தில் அக்கட்சி கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று கோரி வரும் நிலையில், அதற்கு எதிரான நிலைப்பாட்டை அச்சுதானந்தன் எடுத்தது, கட்சியினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அச்சுதானந்தன் கூடங்குளத்திற்கு செல்லவோ, போராட்டக்காரர்களை சந்தித்து பேசவோ கூடாது என கட்சி மேலிடம் நேற்று தடை விதித்தது.
No comments:
Post a Comment