ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தயாநிதி மாறனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவர் அனில் குமார். இவர் சி.பி.ஐ.க்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், தயாநிதி மாறன் நிரபராதி என்றும், சிவசங்கரன் தான் உண்மையான குற்றவாளி என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த கடிதம் பற்றி சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் அனில்குமார் 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டுமென நீதிபதிகள் சிங்வி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 2005ம் ஆண்டு தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவிகித பங்குகளை மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான மேக்சிஸ் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்த பரிவர்த்தனை முடிந்த ஆறு மாதங்களுக்குள் ஏர்செல் நிறுவனத்திற்கு 14 தொலைத்தொடர்பு வட்டங்களில் சேவை அளிக்க உரிமம் வழங்கப்பட்டது.
ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்தத்தின் மூலம் கலாநிதிமாறனும், தயாநிதி மாறனும் பல கோடி ரூபாய் பலன் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த தயாநிதி மாறன், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment