சத்தீஷ்கார் மாநிலம் சிக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் நேற்று கடத்தப்பட்டார். அவரது மாமனார் வேணுகோபால் வீடு மேற்கு முகப்பேரில் உள்ளது.
கலெக்டர் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் பெற்றோர்- மாமனார் வீடுகளில் சோகம் நிலவியது. எல்லோரும் பதட்டத்துடன் உறைந்து போய் உள்ளனர். எந்த ஆபத்தும் இல்லாமல் கலெக்டர் பத்திரமாக மீட்கப்படவேண்டும் என்று உறவினர்கள் கண்ணீருடன் காத்து இருக்கிறார்கள்.
கலெக்டரின் மாமியார் ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். அடிக்கடி சத்தீஷ்கரில் உள்ள புஷ்பபாக்கியத்துடன் பேசி வருகிறார்கள். அவரை தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறி வருகிறார்கள்.
மாமனார் வேணுகோபால் கூறியதாவது:-
நான் தலைமை என்ஜினீயராக அரசு துறைகளில் பணியாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஓய்வு பெற்றேன். எனது மனைவி ஆனந்தியின் சொந்த ஊர் நெல்லை சீதபற்ப்பநல்லூர். எனக்கு ஆனந்தராஜன் என்ற மகனும், புஷ்பபாக்கியம் என்ற மகளும் உள்ளனர்.
ஆனந்தராஜன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். எனது மகள் புஷ்பபாக்கியம் பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. பட்டம் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவள். தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றினாள்.
கடந்த 6 மாதத்துக்கு முன்பு மகள் திருமணம் நடந்தது. அதன்பிறகு அவள் வேலைக்கு செல்லவில்லை. கணவருடன் சத்தீஷ்கர் மாநிலம் சென்று விட்டாள். கர்ப்பிணியாக இருக்கும் அவளை நானும், எனது மனைவியும் அங்கு போய் பார்த்துவிட்டு நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினோம்.
எனது மருமகன் பணியாற்றும் இடம் நமது ஊரைப்போல் உள்ளது. மிகமிக பின்தங்கிய பகுதி. அடர்ந்த காடுகளாகவே இருக்கும். பக்கத்தில் ரெயில் நிலையமோ, விமான நிலையமோ கிடையாது. கம்மம் என்ற இடத்தில் ரெயிலில் இறங்கி அங்கிருந்து 200 கி.மீ. தூரம் மலைப்பாங்கான இடம் நோக்கி 12 மணி நேரம் பஸ் பயணம் செய்ய வேண்டும்.
பெரும்பாலான மக்கள் படிப்பறிவு இல்லாத நிலையில் இருக்கிறார்கள். பொதுவாக அங்கு வெளியில் நடமாடும்போதே திக் திக் என்று இருக்கும். எனது மருமகன் மிகவும் துணிச்சலானவர். மிகவும் நேர்மையானவர். கலெக்டர் ஆனதும் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்தார்.
அடிக்கடி பேசும்போது, சத்தீஷ்கர் மாநிலத்தில் பல பகுதிகளில் மக்கள் படிப்பறிவு இல்லாமல் வாழ்க்கை தரம் மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும். என்னால் முடிந்தவரை அவர்களை முன்னேற்றுவேன் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.
அவர் கலெக்டராக பொறுப்பேற்றதும் ஐ.டி.ஐ. ஏற்படுத்தினார். நவோதயா பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தனது சுற்றுப்பயணத்தின்போது ஆதிவாசி மக்களிடமும், ஏழ்மையாக இருக்கும் மக்களிடமும் அவர்களுடைய வீடுகளுக்கு நேரில் சென்று குறைகளை கேட்பார். என்னென்ன தேவை என்பதையும் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பார்.
அவருடைய பணியில் திருப்தியோடு செயலாற்றி வந்தார். நிச்சயமாக தொடர்ந்து அந்த பகுதி மக்களுக்கு இன்னும் பல நல்ல பணிகள் செய்வார். எனவே மாவோயிஸ்டுகள் அவரை பத்திரமாக விடுவிக்க வேண்டும். எனது மகளுக்கு அம்மாநில உயர் அதிகாரிகள், முதல்- மந்திரி ஆகியோர் பேசி அவ்வப்போது எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி தைரியமூட்டி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேணுகோபால் மனைவி ஆனந்தி இன்று காலை சாமி படத்தின் முன் நின்று விளக்கேற்றி வழிபட்டபடி நின்றிருந்தார். மருமகன் பத்திரமாக மீட்கப்பட வேண்டி அவர் மனம் உருக பிரார்த்தனை செய்து வருகிறார்.
No comments:
Post a Comment