மறைந்த பாலிவுட் நடிகர் ராஜ்குமாரின் மகள் தான் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாக இந்தி நடிகர் ஷாஹித் கபூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மறைந்த பாலிவுட் நடிகர் ராஜ்குமாரின் மகள் வாஸ்தவிக்தா பண்டிட்(33). அவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளார். அவர் கொடுத்த தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் ஷாஹித் மும்பையில் உள்ள வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த சில நாட்களாக மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகள் வாஸ்தவிக்தா பண்டிட் நான் தங்கியிருக்கும் இடத்தின் காம்பவுண்டுக்குள்ளே வந்துவிடுகிறார். நான் எங்கு சென்றாலும் அவர் தனது காரில் என்னை பின்தொடர்கிறார். சமயத்தில் எனது காரை வழிமறிக்கிறார். பிறகு எனது பாதுகாவலர்கள் சென்று அவரை அங்கிருந்து போகச் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களாக அந்த பெண் ஷாஹிதுக்கு இவ்வாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் பார்ப்பவர்களிடம் எல்லாம் தான் ஷாஹிதின் மனைவி என்றும் சொல்லி வந்துள்ளார். பொறுமையை இழந்த ஷாஹித் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் தனது வீட்டை பந்த்ரா பகுதிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாஸ்தவிக்தா கடந்த 2006ம் ஆண்டு வெளியான கரண் ராஸ்தானின் எட்டு சனி என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படமும் ஓடவில்லை, அவருக்கும் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment