2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.மாத்தூர் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகிறார். இவர் செயலாளராக இருந்தபோது தொலைத் தொடர்புத்துறை மந்திரி ராஜாவால் வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் லைசென்சுகள் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாட்சியம் முடிந்ததும், ராஜா மற்றும் அவருடைய வக்கீல் சுசில்குமார் இருவரும், மாத்தூரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் உரத்த குரலில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ஓ.பி.சைனி, அடக்கமாக நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்தார். விசாரணையின் போது வக்கீல் சுஷில்குமார் மாத்தூரிடம் உரத்த குரலில் கேள்வி எழுப்பியது நீதிபதிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
’தயவு செய்து குரலை உயர்த்திப் பேசாதீர்கள். என்னாலும் அதுபோன்று பேச முடியும். அடக்கமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்' என்று நீதிபதி சைனி தெரிவித்தார். குறுக்கு விசாரணையின்போது, அதிகாரி மாத்தூர் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காததை சுட்டிக்காட்டிய வக்கீல் சுசில்குமார், அவருடைய சாட்சியம் தனக்கு நம்பிக்கை அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment