3 படத்தில் இருந்து ஒய் திஸ் கொல வெறி டி பாடலை தடை செய்யக் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
நடிகர் தனுஷ் நடித்த 3' படம் தமிழகம் மற்றும் கேரளாவில் திரையிடப்பட்டு உள்ளது. இதில் கதாநாயகியாக நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி நடித்து உள்ளார். ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இந்த படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் இடம் பெற்று உள்ள ஒய் திஸ் கொல வெறி டி' என்ற பாடல் படம் வெளிவருவதற்கு முன்பே பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி விட்டது. இந்த பாடலை நடிகர் தனுஷே எழுதி, பாடி உள்ளார். உலக அளவிலும் இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவர் 3' படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலை வெறி' பாடலை தடை செய்ய வேண்டும் என்று கூறி எர்ணாகுளம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்
அவரது மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
சமீபத்தில் வெளியாகி உள்ள தனுஷ் நடித்த 3' படத்தில் இடம்பெற்று உள்ள ஒய் திஸ் கொல வெறி' என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் வன்முறையையும், தீவிரவாதத்தையும் தூண்டுவதாக எழுதப்பட்டு உள்ளது. சமீபத்தில் வெளியான அமெரிக்க உளவியல் சங்கத்தின் ஆய்வின்படி இதுபோன்ற பாடல்கள் வன்முறை எண்ணங்கள் உணர்வுகளை அதிகரிக்கச்செய்யும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த பாடல் இளைஞர்களை தீய வழியில் திருப்பி விடும். அத்துடன் பெண்களை ஈவ் டீசிங் செய்வதற்கும் இந்த பாடலை இளைஞர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் இந்த பாடலைப்பாடி வருவதால் அவர்கள் வன்முறைக்கு தூண்டப்படலாம் என்று, சில பள்ளிகள் கவலை தெரிவித்து உள்ளன. எனவே 3' படத்தில் இருந்து இந்த பாடலை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் இந்த மனுவில் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ், பாடலை எழுதி, பாடி, நடித்த நடிகர் தனுஷ், தயாரிப்பாளர், மத்திய மாநில அரசுகள் ஆகியோர் எதிர் சாட்சிகளாக இணைக்கப்பட்டு உள்ளனர். இந்த பாடலுக்கு தணிக்கை குழு எவ்வாறு அனுமதி அளித்து உள்ளது? என்றும் மனுதாரர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை (04.04.2012) எர்ணாகுளம் ஐகோர்ட்டில் நீதிபதி ராமச்சந்திரன் நாயர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
இந்த வழக்கைத் தொடர்ந்த மாடசாமி, 30 மணி நேரம் 6 நிமிடங்கள் தொடர்ந்து மேடையில் பேசி கின்னஸ் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment