முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி. இவர் நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து, 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இந்துமத சன்யாசிகளையும், சாதுக்களையும் பற்றி காட்சிகள் வருகிறது. அந்த காட்சிகளில் சாமியார்கள் அவதூறாக சித்தரித்துக் காட்டப்படுவதாகவும், எனவே அந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கூடாது என்றும் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் இந்து தர்மா சக்தி அமைப்பின் செயலாளர் தேவசேனாதிபதி வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த படத்தில் உளுந்தூர்பேட்டை உலகானந்தா என்ற பெயரில் ஒரு சாமியார் கதாபாத்திரம் காட்டப்படுகிறது. அதன் மூலம் இந்து சாமியார்களை அவதூறாக சித்தரிக்கின்றனர்.
இதனால் சாமியார்கள் மீது சமுதாயத்தில் தவறான எண்ணம் வரும். இந்து மத உணர்வுகளை காயப்படுத்தும். எனவே ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சாமியார் காட்சிகளை நீக்கி வெளியிட அனுமதிக்க வேண்டும். அவதூறு காட்சிகளுடன் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான வக்கீல் ரவிகுமார், பட டிரைலரை மட்டும் பார்த்துவிட்டு மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது என்று வாதிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வினோத்கே.சர்மா, மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment