'நல்லாட்சியின் திறவுகோல்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தகவல் தொழில் நுட்பத்துறையில் நமது நாடு வல்லரசாக திகழ்கிறது. எனவே, இணைய தளம் மூலம் ஓட்டுப்பதிவு (ஆன்லைன் ஓட்டிங்) செய்யும் முறை என்பது ஒன்றும் பெரிதல்ல. அது ஒரு குழந்தைகள் விளையாட்டு போன்றதுதான். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், வருங்காலத்தில் அதை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை. வாக்காளர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். இந்த முறை அமலுக்கு வந்தால், துப்பாக்கி முனையில் உங்களை மிரட்டி சிலர் ஓட்டுப்போட வைக்க முடியும். அடுத்து, உங்களையும் (வாக்காளர்கள்) நம்ப முடியாது.
யாராவது ஒருவர் உங்களிடம் ரூ.5 ஆயிரம் பணத்தை கொடுத்து ஓட்டுப்போட வற்புறுத்த முடியும். இதுபோன்ற நடவடிக்கைகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாதவரை, இணைய தள ஓட்டுப்பதிவு முறைக்கு சாத்தியம் இல்லை.
தேர்தலில் பணபலத்தை கட்டுப்படுத்துவதற்கு, வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டம் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு சில முக்கிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
அரசியல் கட்சிகளில் முழுக்க முழுக்க உள்கட்சி ஜனநாயகம் இருக்க வேண்டும். கட்சிகளின் நிதி நிலைமை விவரம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தேர்தல் செலவுகளுக்கான நிதியை அரசே வழங்கும் முறையை அமல்படுத்த முடியும்.
மக்கள் பங்களிப்பே சிறந்த நல்லாட்சியின் திறவுகோலாக அமையும். வாக்காளர்களின் பங்களிப்பு மூலம்தான் 5 ஆண்டுகளுக்கு நல்லாட்சியை அமைக்க முடியும். சிறந்த வேட்பாளர்களுக்கு நீங்கள் ஓட்டளித்தால், நல்லாட்சி அமைவதற்கு வழிவகுக்கும்.
இவ்வாறு குரேஷி கூறினார்.
No comments:
Post a Comment