இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை செய்யப்படுகிற ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.49-ம், டீசலுக்கு 91 பைசாவும் டீலர் கமிஷனாக கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கான கமிஷனை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய பெட்ரோலியத்துறையிடம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அபூர்வ சந்திரா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பெட்ரோலியத்துறைக்கு பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளன. குறிப்பாக பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்களுக்கு காற்று நிரப்புவதற்கு கட்டணம் வசூலிக்கவும், அந்த வகையில் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2, காருக்கு ரூ.5, பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.20 வசூலிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டீலர் கமிஷனைப் பொறுத்தமட்டில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 27 பைசாவும், டீசலுக்கு 14 பைசாவும் உயர்த்த கமிட்டி சிபாரிசு செய்துள்ளது.
அபூர்வ சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை பெட்ரோலியத்துறை அமல்படுத்தக்கோரி, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து, பெட்ரோல் பங்க்குகளை மூடப்போவதாக அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த மாத இறுதியிலிருந்து, கோரிக்கைகளுக்கு முடிவு காணும் வரை காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெட்ரோலியத்துறை மந்திரி ஜெய்பால் ரெட்டியுடன் 19-ந் தேதியும், 20-ந் தேதியும் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் பல்வேறு கோரிக்கைகள், பிரச்சினைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. டீலர் கமிஷன் பற்றி அபூர்வ சந்திரா கமிட்டி அளித்துள்ள பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்க ஜெய்பால் ரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார்.
பெட்ரோல் பங்க்குகளில் இலவசமாக அளித்து வருகிற காற்று, கழிவறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்றவற்றுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்ற அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரையை பரிசீலிக்கவும் மந்திரி ஒப்புக்கொண்டுள்ளார். எனவே 22-ந் தேதி நள்ளிரவு முதல் 23-ந் தேதி (இன்று) நள்ளிரவு வரை நடக்கவிருந்த பெட்ரோல் பங்க்குகளின் ஸ்டிரைக் ஒத்திப்போடப்படுகிறது.
No comments:
Post a Comment