மனித உரிமை தொடர்பாக இலங்கைக்கு யாரும் சவால் விட முடியாது. ஏனென்றால் மனித உரிமை என்பது எங்கள் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்தது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பொருளாதார முன்னேற்றத்தின் பலன்களை அடிமட்டத்திலுள்ள மக்களும் அனுபவிக்க வழிவகை செய்வதே எனது அரசாங்கத்தின் இலக்கு. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மக்கள் வாக்குறுதியை நிறைவேற்றியது போல ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் வாக்குறுதியும் கைவிடப்பட மாட்டாது.
8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் முறையாக கடந்த ஆண்டு 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. நாட்டின் அனைத்துத் துறைகளினதும் ஏற்பட்ட மறுமலர்ச்சியே இதற்கு உறுதுணையாக அமைந்தது. உலக நாடுகள் பொருளாதாரத்தில் பின்னடைவைக் கண்டு வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக எட்டு விழுக்காட்டிற்கும் அதிகமாக வலுவான பொருளாதார வளர்ச்சியை இலங்கையை எட்டியிருக்கிறது.
பயங்கரவாதத்தை ஒழித்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறையான நடவடிக்கைகள் மூலமே இத்தகைய பலனை அடைய முடிந்தது. பயங்கரவாதம் இலங்கையில் ஒழிக்கப்பட்டாலும் அதன் பின்னணியில் இயங்கிய சக்திகள் சர்வதேச ரீதியில் இன்னமும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன.
வடகிழக்கு வளர்ச்சிக்கு கூடுதல் நிதி
யார் எத்தகைய பிரசாரங்களை மேற் கொண்ட போதும் அரசாங்கம் வடக்கு, கிழக்கு வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு மட்டும் 260 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம் என சகல துறைகளிலும் பெரும் நிதியினை அரசாங்கம் செலவிட்டு அத்துறைகளை முன்னேற்றி வருகிறது. எனினும் எமது அரசியல்வாதிகளுக்கு இது எதுவும் தெரிவதில்லை. அவர்கள் தவறான தகவல்களையே சர்வதேசத்திற்குத் தெரிவிக்கின்றனர்.
தேவையில்லை வெளிநாட்டுத் தீர்வு
30 ஆண்டுகால பிரச்சினைகளுக்கு ஒரு இரவில் தீர்வு காண முடியாது. பல ஆண்டு வருத்தங்கள் சரிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான தீர்வை இறக்குமதி செய்ய முடியாது. வெளிநாட்டுத் தீர்வுகள் பற்றி எங்களுக்குத் தெரியும். அவை எதுவுமே நிரந்தரமானதல்ல. வெளிநாட்டுத் தீர்வுகளுக்கு ஆயுள் மிகக் குறைவு. அவை தற்காலிகமானவை. பல நாடுகள் இதற்கு உதாரணமாகவுள்ளன.
மற்ற நாடுகளை விட மனித உரிமையைப் பேணுவதில் இலங்கை முன்னிலையில் உள்ளது. மனித உரிமை என்பது எமது கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது. இதில் யாரும் எங்களுக்கு சவால்விட முடியாது என்றார் அவர்.
No comments:
Post a Comment