எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் சிகிச்சை பலனின்றி 11,566 நோயாளிகள் இறந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, மும்பையைச் சேர்ந்த அஜய் மராத்தா என்பவர் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களை பெற்றார்.
அதன்படி, மருத்துவமனையின் முதன்மை பிரிவு, இருதயநோய் பிரிவு, நரம்பியல்,அறிவியல் மையம், அவசர சிகிச்சைப் பிரிவு, ஆர்.பி.மையம் ஆகியவற்றில், சிகிச்சை பலனின்றி கடந்த 3 ஆண்டுகளில் 11,566 பேர் இறந்துள்ளனர். இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும், எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்னமும் உறுப்புதானம் சிறப்பாக இல்லை.
இறந்தவர்களின் உடலில் இருந்து சுமார் 8 உறுப்புகளை வரை தானமாக பெற முடியும். ஆனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இதில் மிக அஜாக்கிரதையாக உள்ளனர். கடந்த 2008-09ம் ஆண்டில் இறந்த 4,100 பேரில் 797 பேர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வந்தவர்கள். இதில், 2,380 பேர் மருத்துவமனையின் முதன்மை பிரிவிலும், 923 பேர் இருதய நோய் சிகிச்சைப் பிரிவிலும் இறந்தவர்கள்.
அதற்கு அடுத்த ஆண்டில், 4,159 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதில் 431 பேர் அவசர சிகிச்சைப் பிரிவிலும், 2,700 பேர் முதன்மை பிரிவிலும், 978 பேர் இருதய நோய் சிகிச்சைப் பிரிவிலும் இறந்தவர்கள்.
2010-11ம் ஆண்டில் 738 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் இறந்துள்ளனர். 2,586 பேர் முதன்மை பிரிவிலும், 853 பேர் இருதய நோய் பிரிவிலும் இறந்துள்ளனர். இதுதவிர கடந்த 3 ஆண்டுகளில் சிகிச்சைக்கு வரும்போதே இறந்தவர்களின் எண்ணிக்கை 960.
No comments:
Post a Comment