கலைஞர் தொலைக்காட்சியை கனிமொழி கட்டுப்படுத்தவில்லை என்பதை நம்ப முடியவில்லை என்றும், கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஆசிப் பல்வா மூலம் வந்த ரூ. 214 கோடி பணத்தை, ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய பின்னர் தான் திருப்பித் தந்துள்ளனர். முதலில் லஞ்சமாக வாங்கிய இந்தப் பணத்தை, கடனாக வாங்கியது போல காட்டி திருப்பித் தந்துள்ளனர் என்று நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது திமுக எம்பி கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, கனிமொழி தற்போது எம்.பியாக இருக்கிறார். மேலும் அவர் ஒரு பெண். இது மட்டுமல்ல, கலைஞர் டிவியில் அவருக்கு 20 சதவீதம் பங்குகள் தான் உள்ளன.
இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தை கவனிப்பதில்லை. அவர் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, எதையும் அமல்படுத்தவில்லை. நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் சரத் குமாரே கவனித்து வருகிறார். கலைஞர் டிவியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இப்போது அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே.
கனிமொழி கலைஞர் டிவி நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார் என்பதற்காகவே அவரை குற்றவாளி என்று கூறி விட முடியாது. ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியது எல்லாம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான். அவர் தான் அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பு. அதில் கனிமொழி தலையிடவே இல்லை.
கருணாநிதி மகள் என்பதால் கனிமொழி பழிவாங்கப்படுகிறார். அவர் நீதித்துறையை மதிப்பவர். எங்கும் ஓடி விட மாட்டார். எனவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
இதன்மூலம் முழுப் பழியையும் ராசா மற்றும் சரத்குமார் மீது போட்டார் ராம் ஜேத்மலானி.
இந் நிலையில் இன்றும் இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்தது. அப்போது ராம்ஜேத்மலானி கூறுகையில், கருணாநிதியின் மகள் என்பதால் கனிமொழியை குறி வைக்கிறார்கள். அவருக்கு மகளாகப் பிறந்தது கனிமொழியின் துரதிஷ்டமா? என்றார்.
அவருக்குப் பதிலளித்துப் பேசிய சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித், கலைஞர் தொலைக்காட்சியை கனிமொழி கட்டுப்படுத்தவில்லை என்பதை நம்ப முடியவில்லை, அந்த வாதத்தை ஏற்கவும் முடியவில்லை. கலைஞர் டிவியில் பங்குதாராராக உள்ள யாரோ ஒருவர் அதை நிச்சயம் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.
கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குதாரரும் டிபி ரியாலிட்டி தலைவருமான ஆசிப் பல்வா மூலம் தான் ரூ. 214 கோடி வந்துள்ளது. ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய பின்னர் தான், அந்தப் பணத்தை வட்டியோடு சேர்த்து கலைஞர் டிவி திருப்பித் தந்துள்ளது. முதலில் லஞ்சமாக வாங்கிய இந்தப் பணத்தை, கடனாக வாங்கியது போல காட்டி திருப்பித் தந்துள்ளனர்.
இந்தப் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பண பரிவர்த்தனை குறித்து கலைஞர் டிவி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் உண்மையானது என நம்ப எந்த முகாந்தரமும் இல்லை.
மேலும் கலைஞர் டிவியை நிறுவுவது தொடர்பாக கனிமொழி தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜாவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். கலைஞர் டிவியின் மூளையாக கனிமொழி செயல்பட்டிருக்கிறா
மேலும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரை விட கனிமொழிக்குத் தான் ராசா நெருக்காக இருந்தார். ராசா தவறுகள் செய்ய கனிமொழியும் சரத்குமாரும் உதவியாக இருந்தனர். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்றார்.
நேற்று நீதிமன்ற விசாரணை முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய ராம்ஜேத்மலானி, குற்றப் பத்திரிகையில் பெயர் இடம் பெற்றதால் மட்டுமே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. கலைஞர் டிவி நிறுவனத்தைப் பொருத்தவரை அனைத்து பணப் பரிமாற்றங்களும் காசோலைகள் மூலமே நடந்துள்ளன. எனவே, கருப்புப் பணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் சார்பில் நீதிமன்றத்தில் நேற்று வாதாடிய வழக்கறிஞர் அல்தாப் அகமது, சிபிஐ தாக்கல் செய்த முதல் குற்றப் பத்திரிகையில் கலைஞர் தொலைக்காட்சி பற்றி ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. கலைஞர் தொலைக்காட்சி சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட நிறுவனம். இதற்கான நிதியை பல்வேறு ஆதாரங்களின் மூலம் திரட்ட உரிமை உண்டு. 200 கோடி ரூபாய் பணம் வர்த்தக ரீதியான பணப் பரிமாற்றமே தவிர வேறு ஏதும் இல்லை. அந்தப் பணம் முறைகேடான பணமா, இல்லையா என்பது எப்படித் தெரியும். அந்த 200 கோடி ரூபாய் பணமும் 10 சதவிகித வட்டியுடன் திருப்பி தரப்பட்டுவிட்டது. வணிக நிறுவனங்கள் மீது இப்படி தவறான வழக்குகளை தொடர்ந்தால் இந்தியா எப்படி வளர்ச்சி அடையும் என்றார்.

No comments:
Post a Comment