மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி நடித்துள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சினிமா படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
முன்னாள் துணை முதல்வரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி. இவர் நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் சந்தானத்துடன் இணைந்து, 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் நடித்துள்ளார். ராஜேஷ் எம் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் உளுந்தூர்பேட்டை உலகானந்தா என்ற பாத்திரம் மூலம் இந்துமத சன்யாசிகளையும், சாதுக்களையும் பற்றி காட்சிகள் வருவதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகள் அவர்களை அவதூறாக சித்தரித்துக் காட்டுவதாக உள்ளதாகவும், எனவே இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க கூடாது என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து தர்மா சக்தி அமைப்பின் செயலாளர் தேவசேனாதிபதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "தற்போது டி.வி.களில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தின் டிரைலர் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில், உளுந்தூர்பேட்டை உலகானந்தா என்ற பெயரில் ஒரு சாமியார் கதாபாத்திரம் காட்டப்படுகிறது.
அதில், இந்து சாமியார்களை அவதூறாகவும், கேலிக் கூத்தாகவும் சித்தரித்து காட்டுகின்றனர். அதன்மூலம் சாமியார்கள் மீது சமுதாயத்தில் தவறான எண்ணம் தோன்றுகிறது. இந்து சாமியார்களை பொழுதுபோக்கு அம்சமாக கொண்டு வந்துள்ளனர். இதனால் இந்து மத உணர்வுகளை காயப்படுத்துகின்றனர்.
எனவே 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தை, இந்து மத சாமியார்களை அவதூறாக சித்தரிக்கும் காட்சிகளுடன் திரையிட அனுமதிக்க கூடாது. இந்த காட்சிகளுடன் படத்தை வெளியிடுவதற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கூடாது என்று உத்தரவிட வேண்டும். இந்த அவதூறு காட்சிகளுடன் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்சார் போர்டு பதில்
இந்த மனுவுக்கு பதிலளித்து சென்சார் போர்டு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அதில், சினிமாவை முழுவதும் பார்த்த பிறகுதான் நாங்கள் சான்றிதழ் வழங்குகிறோம். ஆனால் படத்தின் டிரைலரை மட்டும் பார்த்துவிட்டு மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதை ஏற்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோத் கே.சர்மா, வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment