சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக ஐநா அறிவித்துள்ள திட்டத்துக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் சாலை விபத்துகளால் ஏற்படும் இழப்பைப் புரிந்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, சாலை விபத்துகளைக் குறைக்க, 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இத்திட்டம், மே 11 ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
ஜப்பானில் ஒரு அணுகுண்டு வீசப்பட்டபோது, இறந்தவர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர்.
இது, சுனாமியின் பாதிப்பை விட அதிகம்; பூகம்பங்களில் உயிர் இழப்பவர்களை விட அதிகம். ஆனால், இந்த இழப்பு, ஒவ்வொரு நாளும் பரவலாக ஏற்படுவதால் ஒட்டுமொத்த பாதிப்பு நமக்குப் புரிவது இல்லை.
உலகின் வாகன எண்ணிக்கையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள இந்தியாவில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 13 சதவீதம்; சாலை விபத்து உயிரிழப்புகளில் உலகிலேயே இந்தியாதான் முதலிடம் என்ற புள்ளி விவரங்கள், இந்தியப் போக்குவரத்துத் துறைக்கு மக்களின் உயிர்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்பதை காட்டுகிறது.
சீனா, அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து சாலை விபத்துகளைப் பெருமளவு குறைத்து இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
தமிழகத்தில் 2006 ம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 11,009 பேர். 2010 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 15,409 பேர்.
2007 ஏப்ரல் மாதம், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை 2006 ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, 2013 ம் ஆண்டு 20 சதவீதம் உயிர் இழப்பைக் குறைப்போம் என்ற கொள்கை முடிவை எடுத்தது. ஆனால், 2010 லேயே 40 சதவீதம் உயிர் இழப்பு அதிகரித்து இருக்கிறது. 5 வருடங்களாக தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துகளில் உயிர் இழந்தவர்கள் 59,870 பேர்.
மனித உயிர்கள் பலியாவதைப் பற்றிய கவலையோ, சாலை விபத்துகளைத் தடுக்க உண்மையான தீவிர முயற்சியோ இல்லாமல் தமிழக அரசு செயல்படுகிறது என்பது மனதைப் புண்படுத்துகிறது.
ஐநா சபை எடுக்கின்ற மனிதாபிமான முயற்சிகளுக்குப் பிறகாவது மத்திய மாநில அரசுகள், சாலைப் பாதுகாப்பை முதல் முக்கியப் பிரச்னையாகக் கருதி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
இப்பிரச்னையை மிகப் பெரிய சவாலாக எடுத்துக் கொண்டு அரசு, அரசியல் இயக்கங்கள், பொது நல அமைப்புகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், மாணவர்கள், நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும், சீரிய சட்டதிட்டங்களை ஏற்படுத்தியும், அதை சரியாக அமல்படுத்தியும், சரியான சாலைகளை அமைத்தும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வோம்; மக்களைக் காப்போம்.
ஐ.நா. அறிவித்து உள்ள திட்டம் மாபெரும் வெற்றி பெற மதிமுக முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment