14-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி போலந்து, உக்ரைனில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் லீக் ஆட்டம் நேற்று முன் தினத்துடன் முடிந்தது. லீக் முடிவில் செக்குடியரசு, கிரீஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
போட்டியை நடத்திய போலந்து, உக்ரைன் மற்றும் நெதர்லாந்து, சுவீடன், அயர்லாந்து, ரஷியா, டென்மார்க், குரோஷியா ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன. கால்இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு 12.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த செக்குடியரசு- பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே தலை சிறந்தவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். செக்குடியரசு அணி லீக் ஆட்டங்களில் கிரீசை 2-1 என்ற கோல் கணக்கிலும், போலந்தை 1-0 என்ற கோல்கணக்கிலும் வென்றது. ரஷியாவிடம் 1-4 என்ற கணக்கில் தோற்றது.
போர்ச்சுக்கல் அணி டென்மார்க் (3-2), நெதர் லாந்து (2-1) அணிகளை வென்று இருந்தது. ஜெர்மனியிடம் 0-1 என்ற கணக்கில் தோற்றது.
போர்ச்சுக்கல் அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணியின் கேப்டனும் ரியல் மாட்ரீட் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தூணாக உள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 2 கோல்கள் அடித்து விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதேபோல செக்குடியரசு அணி வீரர் தாமஸ் ரோஸ்கியும் சிறந்த வீரர் ஆவார். அரை இறுதியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும். இரு அணிகளும் 11 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் போர்ச்சுக்கலும், செக்குடியரசும் தலா 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் டிராவில் முடிந்தது.

No comments:
Post a Comment