தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரமாக இருக்கும் மதுக்கடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சாலையோர மதுக்கடைகளை மூட இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் மரணங்களுக்கு சாலையோர மதுபானக் கடைகள் முக்கியமான ஒரு காரணம் என்றும், அவை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விடுத்துள்ள நெறிமுறைகளுக்கு மாறானது என்றும் கூறி தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றம் சென்றார்.
சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவுக்கு அமைய உடனடியாக சாலையோர மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டத்தை எதிர்த்து, தமிழக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது.
இதையடுத்து பல மாநிலங்கள் இந்த வழக்கில் தம்மை மனுதாரர்களாக இணைத்துக் கொண்டன.
விசாரணையின் முடிவில் இந்திய உச்சநீதிமன்றம் ‘தேசிய நெடுஞ்சாலைகளுக்கு பொருந்தும் விதிகள் மாநில நெடுஞ்சாலைகளுக்கும் பொருந்தும்’ என உத்தரவிட்டுள்ளது என வழக்கறிஞர் பாலு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வழக்கின் தீர்ப்பின்போது, மேன்முறையீடு செய்த தமிழக அரசையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடிந்து கொண்டனர் என்றும் இந்த வழக்கில் சட்ட நுணுக்கங்களையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் துணைக்கு இழுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர் எனவும் பாலு கூறுகிறார்.
அனைத்து மாநிலங்களும், தமது நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் பிப்ரவரி மாதம் 17க்கு முன்னதாக ஒரு கொள்கை முடிவை எடுத்து உச்சநீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment