படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், லிங்கா விவகாரத்தில் விநியோகஸ்தர்கள் தங்களை காயப்படுத்தி விட்டதாக அறிவித்தார். இருந்தாலும், வேந்தர் மூவிஸ் சிவா கூறும்போது, விநியோகஸ்தர்களுக்கு உரிய நஷ்டஈடு வாங்கித் தருவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், டி.சிவா நேற்று இந்த பிரச்சினைக்கு மூலகாரணமாக இருந்ததாக கூறி தஞ்சை, திருச்சி ஏரியாக்களின் விநியோகஸ்தர் சிங்காரவேலனுக்கு அழைப்பு விடுக்காமல், பிற விநியோகஸ்தர்களை மட்டும் அழைத்து லிங்கா படப்பிரச்சினையில் தயாரிப்பாளரையும், நடிகர் ரஜினியையும் காயப்படுத்தி விட்டீர்கள். ஆகையால், மன்னிப்பு கடிதம் எழுதித் தர கூறியுள்ளார். இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நேற்று சிங்கார வேலன், செங்கல்பட்டு விநியோகஸ்தர் மன்னன் உள்ளிட்ட சில விநியோகஸ்தர்கள் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறும்போது,
லிங்கா படத்துக்கு நஷ்டஈடு கோரி நாங்கள் இருந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு வேந்தர் மூவிஸ் சிவா எங்களிடம் மன்னிப்பு கடிதம் கோரியுள்ளார். நாங்கள் ஏன் அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும், நடிகர் ரஜினியை காயப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், நாங்கள் அவரை காயப்படுத்தும் விதமாக எதுவும் செய்யவில்லை.
படம் வெளியான சில நாட்களிலேயே படத்தின் வசூல் குறித்து வெளியிட்டது, எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தால், பதட்டமடைந்து சொல்லிவிட்டோம். மேலும், ரஜினி பிறந்தநாள் தேசிய விடுமுறையா? அன்றைய தேதியில் ஏன் படத்தை வெளியிடுகிறீர்கள்? என்று பேசியதற்கும் ரஜினியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
மற்றபடி, படத்தின் தயாரிப்பாளர்களிடம் எந்தவிதத்திலும் மன்னிப்பு கோர முடியாது. இந்த படத்திற்கு உரிய நஷ்டஈடு தராவிட்டால் உண்ணாவிரதம் தொடரும் என்று பேசினார்.
No comments:
Post a Comment